பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு சரிவு
புதுடில்லி: கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை, 30 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக வினியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களால், நாட்டின் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை, முதல் காலாண்டில், 30 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக, கவுன்டர்பாயின்ட் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.ரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவு என்பது, 30 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான விலை கொண்ட ஸ்மார்ட்போன்களின் பிரிவாகும்.
இது குறித்து, ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாடு முடக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில், விற்பனை கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்ததால், முதல் காலாண்டில் இத்தகைய சரிவை சந்திக்க நேர்ந்துள்ளது.இருப்பினும் கூட, பிரீமியம் ஸ்மார்ட்போன் துறை மிகவும் குறைவான பாதிப்பையே சந்தித்துள்ளது. ஆப்பிள் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களின் அறிமுகங்கள், இந்த சந்தையை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள உதவி செய்துள்ளன.
அதுமட்டுமின்றி, விற்பனையாளர்கள் அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக கவனத்தை செலுத்தி இருக்கிறார்கள்.இதற்கு முக்கிய காரணம், நல்ல லாபம் மற்றும் பிராண்டுகளை அதிகரித்துக்கொள்வது ஆகியவையே.ஒன்பிளஸ் நிறுவனம், பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரிவில் இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 29 சதவீதமாகும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தை தொடர்ந்து, சாம்சங் இரண்டாவது இடத்திலும், ஆப்பிள் மூன்றாவது இடத்திலும் உள்ளது.தற்போது, 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும் நிலையில், அத்தகைய போன்கள் அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக கருதப்படுகின்றன.சயோமி, ஒப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் இந்த பிரிவிலும் நுழைந்துள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.