ஆன்லைன் ரம்மி: தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி வழக்கு
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும், ஒரு சிலர் தற்கொலை முடிவுக்கு சென்றதாகவும் ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. சமீபத்தில் இது குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது குறித்து மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என அறிவுறுத்தியது. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து விட்டன. தமிழகத்திலும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவர்களை ஆன்லைன் ரம்மி விளையாடச் சொல்லி தூண்டியதாக நடிகை தமன்னா மற்றும் விராட் கோலி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களில் நடித்ததற்காக அவர்கள் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு, ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனால் தமன்னா மற்றும் கோலி கைது செய்யப்படுவார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.