கேரள தங்கக்கடத்தல் வழக்கு: தங்கராணி சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோருக்கு ஆக.21 வரை நீதிமன்ற காவல் விதித்து மீண்டும் சிறையில் அடைப்பு...!!!

தினகரன்  தினகரன்
கேரள தங்கக்கடத்தல் வழக்கு: தங்கராணி சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோருக்கு ஆக.21 வரை நீதிமன்ற காவல் விதித்து மீண்டும் சிறையில் அடைப்பு...!!!

எர்ணாகுளம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் உள்ளது. தூதரகத்துக்கு வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் பொருட்களுக்கு சோதனையில் இருந்து விலக்கு உள்ளது. இது தூதரகத்துக்குரிய  தனியுரிமை ஆகும். இதை சட்டவிரோதமாக பயன்படுத்தி அதிகாரிகள் துணையுடன், தூதரகத்தின் பெயரில் வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் மூலம் தங்ககட்டிகள் கடத்தல் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் முதல் ஓராண்டு காலமாக தொடர்ந்து நடந்துள்ளது.இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சரக்கு விமானத்துக்கு தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல் ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள்  முன்னிலையில் பிரித்து சோதனை செய்தனர். அப்போது அதற்குள் இருந்த 30 கிலோ தங்கக்கட்டிகளை பார்த்து அதிகாரிகள் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் அந்த 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.இதற்கிடையே விமான நிலையத்தில் சிக்கிய தங்ககட்டிகளை விடுவிக்குமாறு முதல் மந்திரி அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியானது. இதனால்  இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது. இதனையடுத்து, கேரள தங்கக்கடத்தல் வழக்கில் இதுவரை சுங்கத்துறையினர், சரித் குமார் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருக்கின்றனர். அதேபோன்று தங்கராணி ஸ்வப்னா,  அவரது கூட்டாளி சந்திப் நாயர் உள்ளிட்டவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மீண்டும் எர்ணாகுளம் காக்கநாடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி  வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. கொச்சி என்ஐஏ நீதிமன்றம் காவல் விதித்ததால் ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை