பறிபோன தலைமையகம் பரிதாபத்தில் அனில் அம்பானி

தினமலர்  தினமலர்
பறிபோன தலைமையகம் பரிதாபத்தில் அனில் அம்பானி

மும்பை:நிலுவைத் தொகையை திருப்பி செலுத்தாததால், அனில் அம்பானியின் தலைமையகத்தை, யெஸ் பேங்க் கையகப்படுத்தி உள்ளது.

அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், யெஸ் பேங்குக்கு செலுத்த வேண்டிய, 2,892 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிய காரணத்தால், மும்பை சான்டாகுரூசில் இருக்கும் அவரின் தலைமையகத்தை, யெஸ் பேங்க் கையகப்படுத்தி உள்ளது.

திவால் நடவடிக்கை

மேலும், தெற்கு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருக்கும், அனில் அம்பானிக்கு சொந்தமான இரண்டு வீடுகளையும், கையகப்படுத்தி உள்ளது. தலைமையகம் மற்றும் வீடுகளை கையகப்படுத்திய விபரத்தை, யெஸ் பேங்க், செய்தித்தாள்கள் மூலம் தெரிவித்து உள்ளது.

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களும், ‘ரிலையன்ஸ் சென்டர்' என்று அழைக்கப்படும் சான்டாகுரூஸ் அலுவலகத்துக்கு வெளியே தான், அண்மைக் காலமாக செயல்பட்டு வருகின்றன.கடந்த சில ஆண்டுகளாகவே, திவால் நடவடிக்கைகள் மற்றும் பங்குகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது, அனில் திருபாய் அம்பானி குழுமம்.

கடனில் சிக்கியது

ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திலிருந்து, 2,892.44 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, மே, 6ம் தேதி வசூலிக்க முயன்றதாகவும், அறிவிப்பு வெளியான, 60 நாட்களுக்கு பிறகும், கடனை திருப்பி செலுத்தத் தவறியதால், ஜூலை, 22ம் தேதி, மூன்று சொத்துக்களையும் கையகப்படுத்தியதாகவும், யெஸ் பேங்க் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன், 23ம் தேதியன்று, அனில் அம்பானி, ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம், நடப்பு நிதியாண்டில், முற்றிலும் கடன் இல்லாத நிறுவனமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் பாக்கித் தொகைக்காக, தலைமையகத்தையே பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

மூலக்கதை