அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டப்பட்டிருந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக திமுக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஜங்ஷனில் அண்ணா சிலை உள்ளது. அவருடைய பிறந்த நாள் விழா மற்றும் நூற்றாண்டு விழாக்களில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணா சிலையில் காவி துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது.

இதை பார்த்த திமுக, அதிமுக கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் களியக்காவிளை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

அண்ணாசிலைக்கு காவி துணி அணிவித்தது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக சார்பில் குழித்துறை நகர செயலாளர் ஆசைதம்பி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் குழித்துறையில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


.

மூலக்கதை