மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

* பொதுபோக்குவரத்துக்கு அனுமதி இல்லை
* இ-பாஸ் திட்டத்தில் மாற்றம் இல்லை
* முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுபோக்குவரத்துக்கு அனுமதியில்லை.

இ. பாஸ் முறையில் மாற்றம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 6 கட்டங்களாக ஜூலை 31ம் (நாளை) தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் 7வது கட்ட ஊரடங்கை நேற்று இரவு அறிவித்தது.

அதில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தது. உடற்பயிற்சி மற்றும் யோகா மையங்கள் ஆகஸ்டு 5ம் தேதி முதல் திறக்கப்படும்.

மாநிலத்திற்குள்ளும் வெளி மாநிலங்களுக்கும் செல்ல இ-பாஸ் தேவையில்லை.

இரவு நேரங்களில் வெளியில் நடமாட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளது.

அதே நேரம் இந்த கட்டுப்பாடுகளை, மாநில அரசுகள் தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இரண்டாவது நாளாக இன்று காலை 10. 35 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் சவுமியா சுவாமிநாதன் ஜெனீவாவில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

கடந்த 29ம் தேதி நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் இன்று (30ம் தேதி) நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும்,

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை  தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்,  31. 7. 2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும்,  31. 8. 2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2. 8. 2020, 9. 8. 2020, 16. 8. 2020, 23. 8. 2020 & 30. 8. 2020)  எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1. 8. 2020 முதல்  அனுமதி அளிக்கப்படுகிறது:

1) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
2) உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.   எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.   உணவகங்களில் முன்பு இருந்தது (31. 7. 2020 வரை) போன்று  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
3) ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான  வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி,  ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள  சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும்,  தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.   பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும்,  பொது மக்கள்  தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

 
4) காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை  காலை 6 மணி முதல் மாலை 6  மணி வரை  இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
5) ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
6) அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி  தவிர,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  மாவட்ட  பகுதிகளிலும்  நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு 1. 8. 2020 முதல்  அனுமதி அளிக்கப்படுகிறது:
1)  ஏற்கனவே  ஊராட்சிப் பகுதிகளில்  அனுமதிக்கப்பட்டுள்ள  நிலையில்,   பேரூராட்சி  மற்றும்  நகராட்சி பகுதிகளில் உள்ள  சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும்,  தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும்  மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன்  பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.   பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள  அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும்,  பொது மக்கள்  தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
பொது
* குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.


* தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
* இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.
* ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும்,  வெளி மாநிலங்களிலிருந்து  தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம்  முறைப்படி இ பாஸ் பெற வேண்டும்.
* தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி,  மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை  கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.


ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான   தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:
* மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும்  பொதுமக்கள் வழிபாடு.
* அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்.
* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும்.   எனினும்,  மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு  மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.  
* வணிக வளாகங்கள்.
* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்  மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.   எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.
* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
* மெட்ரோ ரயில்/மின்சார ரயில்.


* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
* மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து.
மேற்கண்ட கட்டுப்பாடுகளில்,  தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

.

மூலக்கதை