நாளை மறுதினத்துடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பொதுபோக்குவரத்து தொடக்கம்?...முதல்வர் எடப்பாடி இன்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை மறுதினத்துடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பொதுபோக்குவரத்து தொடக்கம்?...முதல்வர் எடப்பாடி இன்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நாளை மறுதினத்துடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி இன்று காலை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் மாவட்டங்களில் பேருந்து பயணத்துக்கு அனுமதிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 6 கட்டங்களாக ஜூலை 31ம் தேதி வரை (நாளை மறுதினம்) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால், இந்த கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகம் முழுவதும் ேநற்று வரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர். பி. உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது, கொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார்.

இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டத்தில் தற்போது  கொரோனா தொற்று பரவல் எந்த நிலையில் உள்ளது, இனிமேல் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினர். இந்த ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

இன்று நடைபெற்ற கலெக்டர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் ஆகஸ்டு 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா? அல்லது புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு  வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கினர். அதற்கு பதில், அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவெடுக்கலாம் என்று முதல்வர் அறிவுரை வழங்கினார்.

அதேபோன்று, பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். அப்போதுதான், தொழிலாளர்கள் வேலைக்கு எளிதில் சென்று வர முடியும் என்று வலியுறுத்தினர்.

அதனால், குறைந்தபட்சம் அந்தந்த மாவட்டங்களுக்கு இடையே ஆகஸ்டு மாதம் முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ள முதல்வர் எடப்பாடி, நாளை (வியாழன்) காலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 19 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் நேரிலும், சிலர் வீடியோ கான்பரன்சிங் மூலமும் பங்கேற்க உள்ளனர்.

கடைசியாக கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் சென்னையில் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டி அளித்த மருத்துவ குழுவினர், “ஊரடங்கு என்பது, பெரிய கொடாரியை வைத்து கொசுவை அழிப்பது போன்றது.

அதனால் ஊரடங்கை தவிர்த்து, அரசு மாற்றி யோசிக்க வேண்டும்” என்று அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாக கூறினர். இதையடுத்துதான் பல்வேறு தளர்வுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

அதனால் நாளை நடைபெறும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்று மாவட்ட கலெக்டர்கள், நாளை மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு, நாளை மாலை முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடுகிறது. அந்த அறிவிப்பில், தமிழகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் ஒரு சில மாவட்டங்களில் மட்டும், அந்தந்த மாவட்டத்துக்குள் பேருந்து செல்ல அனுமதிக்கப்படும்.

தியேட்டர்கள், பெரிய மால்கள், நீச்சல் குளங்கள் திறக்க வாய்ப்பு இல்லை. பள்ளி, கல்லூரிகளும் ஆகஸ்டு மாதம் திறக்கப்பட மாட்டாது.

உடற்பயிற்சி கூடங்களில் குறைந்த அளவு எண்ணிக்கையில் அனுமதி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது, கடைகள் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது.

டீக்கடைகளில் உட்கார்ந்து டீக்குடிக்கவும், ஓட்டல்களில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார்.

.

மூலக்கதை