போலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜின் மகளுக்கு அரசு வேலை : பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜின் மகளுக்கு அரசு வேலை : பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்

சென்னை: போலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் ஜெயராஜ்  மகளுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், அந்த குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் முதல்வர் 24. 6. 2020 அன்று உத்தரவிட்டார்.

அதன்படி, உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கடந்த மாதம் 26ம் தேதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, குடும்பத்தின் வாரிசுதாரரான மறைந்த ஜெயராஜ் மூத்த மகள் பெர்சிஸ்க்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை முதல்வர் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. சண்முகநாதன், தலைமை செயலாளர் சண்முகம், பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

.

மூலக்கதை