நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி.! சீமான் மீது வழக்கு? எழும்பூர் மாஜிஸ்திரேட்டிடம் நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வாக்குமூலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி.! சீமான் மீது வழக்கு? எழும்பூர் மாஜிஸ்திரேட்டிடம் நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ‘இதுதான் எனது கடைசி வீடியோ’ என்று கூறி வீடியோ வெளியிட்டு விட்டு நடிகை விஜயலட்சுமி மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரிடம், எழும்பூர் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் வெங்கடேசன் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

இதையடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழில் பூந்தோட்டம், பிரண்ட்ஸ், கலகலப்பு, மிலிட்டரி, ராமச்சந்திரா, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்பட பல படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி.

மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார். சீமான் இயக்கிய வாழ்த்துகள் படத்தில் அவர் நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.

பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் இருவரும் பிரிந்தனர். பின்னர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி என்னுடன் குடும்பம் நடத்தி ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் சீமான் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பிறகு அடிக்கடி தனது பேஸ்புக் பக்கத்தில் சீமான் குறித்து வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்த வீடியோவிற்கு ஹரிநாடார் என்பவர் ஒரு பதில் வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி வீட்டில் இருந்து நடிகை விஜயலட்சுமி நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஹரி நாடார் குறித்தும் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டார்.

 அதில் நடிகை விஜயலட்சுமி பேசியிருப்பதாவது:‘வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கின்ற எல்லா நண்பர்களுக்கும் எனது வணக்கங்கள். இது என்னுடைய கடைசி வீடியோ.

கடைசி வீடியோவில் நான் என்ன சொல்கிறேன் என்றால், 4 மாதங்களாக சீமான், சீமானோட கட்சி, சீமான் கொடுத்த பிரஷருக்கு எல்லாம் நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். இத்தனை நாட்கள் நான் ரொம்ப மல்லுக்கட்டி வாழ வேண்டும் என்று நான் இருந்தது எனது அம்மாவுக்கும், எனது அக்காவுக்காகவும்தான்.

நேற்று முன்தினம் ஹரி நாடார் வந்து பேசி ரொம்ப அசிங்கப்படுத்தனது, மீடியாவில் வந்து ரொம்ப அசிங்கப்படுத்தினது, இது எல்லாம் வந்து எனக்கு போதும்னு ஆகிப்போச்சு. இன்று வந்து நான், இது பிபி மாத்திரை.



ஆல்ரெடி 2 மாத்திரை போட்டாச்சு. அதிகமாகவும் போட்டாச்சு.

இன்னும் கொஞ்சநேரத்தில் பிபி குறையும். இன்னும் சிறிது நேரத்தில் நான் இறக்க போகிறேன்.

இந்த வீடியோவில் நான் தெளிவாக என்ன சொல்ல விருப்பப்பட்டேன்னா, எனது ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் கர்நாடகாவில் பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை போட்டு சீமான் ரொம்ப டாச்சர் பண்றது, நான் ஒரு பெண்ணாக இருந்து சந்திப்பது அதிகம்.

ஹரி நாடார் வந்து நேற்று ஜாதி பற்றி பேச வந்தாரு. பொதுவாக சீமானுக்கு இந்த வாழ்க்கையை பிச்சை போட்டது வந்து தலைவர் பிரபாகரனுடையே ஜாதி பெண் நான்.

பிள்ளைமார் சாதி. இந்த வாழ்க்கையை அவர்களுடன் பிச்சை கேட்டபோது சீமானுக்கு எந்த ஜாதின்னும் தெரியவில்லை.

ஆனால், தமிழில் ஒரு பிள்ளைமார் பெண்ணை வந்து வாழ்க்கையை சீரழிக்கும்போது, சமுதாயத்தில் எல்லாருக்கும் முன்னாடியும் வந்து சமூக வலைத்தளங்களில் அவமானப்படுத்தும்போது எல்லாரும் பெருமைப்பட்டு இருக்காங்க.

நான் என்ன சொல்றேன்னா, நீங்க என்ன நோக்கத்தோடு வந்து என்னை ஒரு ஐட்டம், பிராத்தல் என்று டாச்சர் பண்ணீங்களோ, நீங்கள் எதுக்கு பண்ணீங்கன்னா, நான் ரொம்ப அவமானப்படவேண்டும் என்றுதானே பண்ணீங்க? அவமானப்பட்டால் நான் என்ன பண்ண வேண்டும் என்பது என்னோட முடிவு. இந்த வீடியோவில் நான் தெளிவாக சொல்லிக்கிறேன்.

என் குடும்பத்தை நான் உங்களிடம் விட்டுட்டு போகிறேன். வீடியோ பார்த்துக்கிட்டு இருக்கிற ரசிகர்கள் யாரும் விடாதீங்க.

முன்ஜாமீன் எல்லாம் எடுக்கவே கூடாது. அதாவது, நான் வந்து எல்லோரிடம் சொல்லிக்கிறேன். ஹரி நாடார் ஆகட்டும், சீமான் ஆகட்டும், நான் எல்லாருக்கும் சொல்லிக்கிறேன்.

நீங்க வந்து நாக்கு அறுத்துவிடுவேன் என்று சொன்னது வந்து ஆம்பளைத்தனம் கிடையாது. ஆமாம், நான் வந்து நாக்கை அறுத்துவிடுவேன் என்று சொன்னேன்.



அவள் சரியாகத்தான் சொன்னாள், சரியாகத்தான் செத்தாள் என்று நாளைக்கு நீங்கள் பேச தைரியம் இருக்கிறதா என்று நான் இப்ப பார்க்க வேண்டும். ஒரு பெண்ணை வந்து இத்தனை நாள் நீங்கள் பார்த்தீங்கனா, எத்தனைபேரிடம் நான் கதறி இருப்பேன்.

எல்லாரும் விதவிதமா ரசித்தீர்கள். நான் என்ன சொல்றேன் என்றால், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கலாமா? வேண்டாமா என்று யோசித்து இருக்கிறது.

என்னுடைய இறப்புபெரிய விழிப்புணர்வாக இருக்க வேண்டும்’. இவ்வாறு விஜயலட்சுமி கண்ணீர் மல்க வீடியோ பதிவு செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவான்மியூர் போலீசார் நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று மயக்க நிலையில் மயக்க நிலையில் இருந்தஅவரை மீட்டு, அடையாறு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சை காரணமாக நடிகை விஜயலட்சுமி தற்போது நலமாக உள்ளார்.

பிறகு திருவான்மியூர் போலீசார் நடிகை விஜயலட்சுமி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், நடிகை தற்கொலை முயற்சி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவியது.

அதைதொடர்ந்து இன்று காலை எழும்பூர் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் வெங்கடேன் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை விஜயலட்சுமியிடம் 1 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஹரி நாடார் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் எழுத்துபூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார்.

பிறகு நடிகை விஜயலட்சுமி சீமான் மற்றும் ஹரிநாடார் மீது அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீமான், ஹரிநாடார் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஓரிரு நாளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை