கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்

ஜெனீவா: கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளபோதிலும், அது மக்களுக்கு 2021ம் ஆண்டுக்கு முன்னதாக கிடைக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்றும், இந்த தடுப்பூசி ரூ. 1,000 விலையில் கிடைக்கும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்தூள்ளது.



இவ்வாறாக பல நாடுகளும் தடுப்பூசி கிடைப்பது குறித்து பல்ேவறு கருத்துகளை கூறி வருகின்றன. ஆனால், உலக சுகாதார நிறுவனம் 2021ம் ஆண்டுக்கு முன்னதாக தடுப்பூசி கிடைக்காது என்று தெரிவிக்கிறது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்ட அமைப்பின் இயக்குனர் மைக் ரையான் கூறியதாவது:  கொரோனா தடுப்பு மருந்து சோதனை, உலகளவில் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை, 3ம் கட்டத்தை எட்டியுள்ளது.

இதுவரை எவ்விடத்திலும் தோல்வி ஏற்படவில்லை. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவே, தற்போது தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது.

ஆனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல நாடுகளில் மிக அதிகளவில் உள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனைகள் வெற்றி அளித்துள்ள நிலையில், 2021ம் ஆண்டின் முற்பகுதியில், மக்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.



சர்வதேச அளவில், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால், தடுப்பு மருந்தை அதிகளவிற்கு உற்பத்தி செய்ய சர்வதேச நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை, பணக்கார நாடுகள் ஏழை நாடுகள் என்ற பாகுபாடுஇன்றி அனைவருக்கும் எளிதில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தங்களது தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று நிரூபித்தால், அமெரிக்க அரசு 100 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை, 1. 95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க முன்வந்துள்ளதாக தடுப்பு மருந்து தயாரித்துள்ள பிஸர் இங்க் மற்றும் ஜெர்மன் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராதநிலையில், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகே அந்தந்த நாடுகள், மாநிலங்கள் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை