மலையை பாதுகாக்க கோரி குன்னூர் மாணவி வழக்கு

தினகரன்  தினகரன்
மலையை பாதுகாக்க கோரி குன்னூர் மாணவி வழக்கு

குன்னூர்: மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க கோரி நீலகிரியை சேர்ந்த பள்ளி மாணவி  உட்பட 26 பேர் கொண்ட குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உயிர் சூழல் மண்டலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இதில், வனவிலங்கு சரணாலயம், தேசிய பூங்கா மற்றும் காப்பு காடுகள், சோலை மரக்காடுகள் உள்ளன. இங்கு அரிய வகை விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் தாவரங்கள் அதிகளவில் உள்ளன. கடந்த பல வருடங்களாகவே இந்த மேற்கு தொடர்ச்சி மலை அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.இந்த மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகப்படியான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை இதன் தன்மையை நாளுக்கு நாள் இழந்து வருகிறது. சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை கொண்ட இந்த மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க கோரி ‘ஓசை’ என்னும் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் குன்னூரை சேர்ந்த பள்ளி மாணவி காவியா (17) உட்பட 26 பேர் உள்ளனர். இது குறித்து காவியா கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சார்ந்த 26 பேர் கொண்ட குழு மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில், மாதவ் காட்கில் என்பவரின் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, மேற்கு தொடர்ச்சி மலையை பாதுக்காக வழிமுறைகளை வெளியிட்டு இதை சம்பந்தபட்ட மாநிலங்கள் பின்பற்ற நெறிமுறைகளை வெளியிட்டது. ஆனால், இதை எந்த மாநில அரசும் நடைமுறைப்படுத்த வில்லை. இவரது வழிமுறைகளை பின்பற்றி மத்திய மாநில அரசுகளுக்கு ஆணை பிறப்பித்து மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது’’ என்றார்.

மூலக்கதை