டிரம்ப் பற்றிய சர்ச்சை புத்தகம் வெளியிட நீதிமன்றம் அனுமதி
நியூயார்க் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து, அவரது உறவினர் எழுதியுள்ள சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிட, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய உறவினர் மேரி டிரம்ப். இவர், அதிபர் டிரம்ப் பற்றி, 'உலகின் மிக அபாயகரமான மனிதனை எங்கள் குடும்பம் எப்படி உருவாக்கியது' என்ற தலைப்பில், ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு, டிரம்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதில், தங்கள் குடும்பத்தை பற்றிய சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் இருப்பதால், அந்த புத்தகத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள விஷயங்களை பேசுவதற்கும், மேரி டிரம்பிற்கு தடை விதிக்கும்படியும் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிட, மேரி டிரம்பிற்கு அனுமதி அளித்து, நேற்று உத்தரவிட்டது.