கொரோனா முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவன ஆய்வில் பகீர் தகவல்

தினகரன்  தினகரன்
கொரோனா முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள்: தொண்டு நிறுவன ஆய்வில் பகீர் தகவல்

லண்டன்: கொரோனா முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டார்கள் என்ற பகீர் தகவல் தொண்டு நிறுவன ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக லண்டனில் இயங்கி வரும் சேவ் தி சில்ட்ரன் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா காரணமாக ஊரடங்கு நிலவுவதால், உலகம் முழுவதும் 160 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். கொரோனா பிரச்சனையால் உலகம் முழுவதும் வறுமை அதிகரிக்கும். கல்விக்கு அரசுகள் பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகை குறையும். இதனால், ஊரடங்கு முடிந்த பிறகு குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப செல்லாமல் இருக்கும் ஆபத்து, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் அதிகமாக இருக்கும். மேலும், 28 நாடுகளில், இந்த ஆபத்து அதிகமாகவோ அல்லது மிதமாகவோ இருக்கும். மொத்தத்தில், உலகம் முழுவதும் 97 லட்சம் குழந்தைகள், மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாதநிலைக்கு தள்ளப்படுவார்கள். இது, முன் எப்போதும் இல்லாத கல்வி நெருக்கடி நிலை. அடுத்த 18 மாதங்களில், ஏழை நாடுகளில் கல்விக்கு செலவழிக்கும் தொகை 7,700 கோடி டாலர் குறையும். இப்படி பட்ஜெட் ஒதுக்கீட்டை குறைப்பதால், ஏழை-பணக்காரர் இடையிலான வேறுபாடு இன்னும் அதிகரிக்கும். பள்ளிகள் மூடியுள்ள காலத்தில், பெண் குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு உள்ளாவது அதிகரிக்கும். குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பங்கள் ஆகியவையும் உயரும். கல்விக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை போக்க உலக நாடுகளும், நன்கொடையாளர்களும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை