எங்களுக்கு அதிக வரி விதியுங்கள்; பெருங்கோடீஸ்வரர்கள் கோரிக்கை

தினமலர்  தினமலர்
எங்களுக்கு அதிக வரி விதியுங்கள்; பெருங்கோடீஸ்வரர்கள் கோரிக்கை

லண்டன்: 'கொரோனாவின் தாக்கத்தை சமாளிக்க அதிக நிதி தேவைப்படுவதால், எங்களைப் போன்றவர்களுக்கு அதிக வரி விதியுங்கள்' என, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, பெருங்கோடீஸ்வரர்கள், 80 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

அபிகெய்ல் டிஸ்னி, டிம் டிஸ்னி, மேரி போர்டு உள்ளிட்ட பெருங்கோடீஸ்வரர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நாங்கள், நோயாளிகளை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவு வழங்கவில்லை. ஆனால், எங்களிடம் ஏராளமான பணம் உள்ளது.கொரோனா, 50 கோடி மக்களை வறுமையில் தள்ளியுள்ளது.

வியாபாரம் இல்லாததால், கோடிக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது. ஏற்கனவே, 100 கோடி குழந்தைகள், பள்ளிக்குச் செல்ல முடியாமல் உள்ளனர். மருத்துவமனைகளில், படுக்கைகள், பாதுகாப்பு உடுப்புகள், முக கவசங்கள், செயற்கை சுவாசத்திற்கு உதவும், 'வென்டிலேட்டர்'கள் ஆகியவை பற்றாக்குறையாக உள்ளன. பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த, போதிய முதலீடு இல்லை.

இரவு, பகல் பாராது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கும், நாம் பெரிதும் கடன் பட்டுள்ளோம். அவர்களை போல, அத்தியாவசிய பணிகளில் உள்ளோருக்கு, மிகக் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது.வேலை இழப்பு, வீட்டை பராமரிக்க முடியாத நிலை என்பது போன்ற, கோடிக்கணக்கானோரின் கவலைகள், எங்களுக்கு இல்லை. அதனால், எங்களுக்கு வரி விதியுங்கள். இது ஒன்றே வழி.

வலிமையுள்ளவர்கள் தான் சுமையை தாங்க வேண்டும். எங்களுக்கு பணத்தை விட, மனிதநேயம் தான் முக்கியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரிட்டன் அரசு, பெருங்கோடீஸ்வரர்களுக்கு செல்வ வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

மூலக்கதை