பிரேசிலில் ஒரே நாளில் 39 ஆயிரம் பேருக்கு பாதிப்பு; ஊரடங்கில் இல்லை தளர்வு

தினமலர்  தினமலர்
பிரேசிலில் ஒரே நாளில் 39 ஆயிரம் பேருக்கு பாதிப்பு; ஊரடங்கில் இல்லை தளர்வு

பிரேசிலியா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், 39 ஆயித்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

பிரேசில் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், 39,023 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது; ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று மட்டும் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை, 18.39 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,469 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை, 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.


உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் கடும் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளது. பிரேசிலின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, ஊரடங்கை தளர்த்தி அனைத்து தொழில்நிறுவனங்களையும் திறக்குமாறு, மாகாண மேயர்களிடம், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சினோரா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், 'தற்போதைய சூழலில் தளர்வுகள் மேற்கொண்டால் குளிர்காலத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும்' என, மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதனால் ஊரடங்கில் தளர்வுகளை கொடுக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.இவ்வாறு தெரிவித்துள்ளது.


'கொரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும்' என, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனோரா கூறி வந்தார். இந்த கருத்திற்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. 'அதிபர் ஜெய்ர் போல்சோனோராவின் அலட்சியமே பிரேசிலில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கு காரணம்' என, பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரேசில் அதிபருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில், அவருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை