திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., கைது! கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் துப்பாக்கிச்சூடு

தினமலர்  தினமலர்
திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., கைது! கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் துப்பாக்கிச்சூடு

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான கோஷ்டி மோதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய, திருப்போரூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன் கைது செய்யப்பட்டார். தந்தையை அரிவாளால் வெட்டியதால், ஆத்திரமடைந்த அவர், இச்செயலில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், போலீசார் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன், 45. இவரது தந்தை லட்சுமிபதி, 75; திருப்போரூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர். நில பிரச்னைஇவர்கள், திருப்போரூர் அடுத்த, இள்ளலுார் ஊராட்சி, செங்காடு பகுதியில் வசிக்கின்றனர். இதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். ஒரே சமூகத்தைச் சேர்ந்த, இரு தரப்பினருடமும், நீண்ட நாட்களாக நில பிரச்னை இருந்துஉள்ளது. அரசுக்கு சொந்தமான நிலத்தில், செங்காட்டில் அமைந்துள்ள சங்கோதி அம்மன் கோவிலின், தெற்குப் பகுதியை, எம்.எல்.ஏ., தரப்பினர், பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.


கோவிலின் வடக்குப் புறத்தை, குமார் தரப்பினர், பாதைக்காக ஆக்கிரமிக்க தொடர்ந்து முயன்றுள்ளனர். இதை, எம்.எல்.ஏ., தரப்பினர் தடுத்து உள்ளனர். இந்நிலையில், 10ம் தேதி, குமாரின் நிலப் பகுதியில், லட்சுமிபதி வாய்க்கால் தோண்டியுள்ளார். இதை கண்டித்த, குமாரின் தாயாரை அவதுாறாக பேசியுள்ளார். இது குறித்து, நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு, திருப்போரூர், காவல் நிலையத்தில், குமார் புகார் அளித்து உள்ளார். அதில், 'எங்களது பட்டா நிலத்தில், உறவினர்கள் துணையுடன், எம்.எல்.ஏ.,வும், அவரின் தந்தையும், கால்வாய் வெட்ட முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்று மாலையே, சென்னை, கண்ணகி நகர் ரவுடி கும்பலுடன் சென்று, கோவில் வடக்கு புறத்தில், பாதை அமைக்க குமார் முயன்றார். கோவில் அருகே, எம்.எல்.ஏ., வீடு அமைந்துள்ள நிலையில், இரு தரப்பிற்கும் மோதல் வெடித்தது. ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், குமாரின் ஆட்கள், லட்சுமிபதியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, எம்.எல்.ஏ., இதயவர்மன், தன் கைத்துப்பாக்கியால், எதிர் கும்பலை சுட்டார். லட்சுமிபதியும், நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இதில், தோட்டாக்கள் பாய்ந்து, குமாரும், அவ்வழியே சென்ற, தையூர் பகுதியைச் சேர்ந்த, சீனிவாசன் என்பவரும் காயமடைந்தனர்.

இந்த களேபரத்தில், மூன்று இரு சக்கர வாகனங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. அங்கு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., கண்ணன், திருப்போரூர் காவல் நிலையத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு அளித்த பேட்டி:கோவில் நில பிரச்னை தொடர்பாக, ஏற்கனவே சிவில் வழக்கு உள்ளது.

விசாரணை:


இது, கோட்டாட்சியர் விசாரணையில் உள்ளது. கடந்த, 10ம் தேதி, எம்.எல்.ஏ.,வின் ஆட்கள், தங்கள் பட்டா நிலத்தை ஆக்கிரமித்து, கால்வாய் அமைக்க முயல்வதாக, திருப்போரூர் காவல் நிலையத்தில், குமார் புகார் அளித்தார். எஸ்.ஐ., ஒருவர், சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தி உள்ளார். மாலையில், இரு தரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு, எதேச்சையாக சென்ற தன்னை, எம்.எல்.ஏ., இதயவர்மன் துப்பாக்கியால் சுட்டார் என, சீனிவாசன் என்பவர் புகார் அளித்துஉள்ளார்.

அதேபோல, 'குமார் தரப்பினர், 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை அழைத்து வந்து, தங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அரிவாளால் வெட்டினர்' என, எம்.எல்.ஏ., தரப்பினர் புகார் அளித்துள்ளனர். இந்த மூன்று தரப்பினரும் அளித்த புகார்கள் மீது, கொலை முயற்சி, சட்ட விரோதமாக துப்பாக்கியை பயன்படுத்துதல் உள்ளிட்ட, ஆறு சட்டப் பிரிவுகளின் கீழ், மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.

சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட, இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாட்டு துப்பாக்கியால் சுட்டதை, எம்.எல்.ஏ., தந்தை அளித்த புகாரில் ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல, கைத்துப்பாக்கியால், எம்.எல்.ஏ., இரு ரவுண்டுகள் சுட்டதும் ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது. இருவரும் பயன்படுத்திய துப்பாக்கிகளின் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. எம்.எல்.ஏ., தரப்பில், அவரது தம்பி, விமல் உட்பட, நான்கு பேரை கைது செய்துள்ளோம். குமார் தரப்பில், மூவரிடம் விசாரிக்கிறோம். சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட, டிராக்டர், ஜே.சி.பி., வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில், காயமடைந்த, எம்.எல்.ஏ., தந்தை உள்ளிட்டோர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனிவாசன், தங்களுக்கு எதிராக புகார் அளித்து இருப்பதால், அவரை, எம்.எல்.ஏ., தரப்பினர், தலைமறைவாக வைத்து இருப்பது தெரிய வருகிறது. அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.துப்பாக்கி சூடு நடத்திய, எம்.எல்.ஏ., மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்ய, நான்கு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுடன், நான்கு இன்ஸ்பெக்டர்களும், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், தி.மு.க., நிர்வாகி ஒருவரின் காரில், இதயவர்மன், சென்னைக்கு தப்பிச் சென்று இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், அந்த கார், மேடவாக்கம் பகுதியில் சுற்றியதை, போலீசார் கண்டறிந்தனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி கேமரா' பதிவுகளை ஆய்வு செய்தபோது, கார், மேடவாக்கத்தைச் சேர்ந்த, சுரேஷ் என்பவருக்கு சொந்தமானது என, தெரிய வந்தது. நேற்று மாலை, சென்னை, பள்ளிக்கரணை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் உதவியுடன், சுரேஷை பிடித்து விசாரித்தனர்.

அவர், எம்.எல்.ஏ.,வின் மைத்துனர் என்பது தெரிய வந்தது. இதயவர்மன், மேடவாக்கம், இந்திரா காந்தி நகரில் உள்ள, மாமனார் வீட்டில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று மாலை, 3:00 மணிக்கு, சென்னை போலீசார் உதவியுடன், தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்; காரையும் பறிமுதல் செய்தனர். இதயவர்மனுடன் சேர்த்து, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை, 4:30 மணிக்கு, செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு, எம்.எல்.ஏ.,வை அழைத்து வந்தனர்.

அப்போது, சீனியர் வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் வழக்கறிஞர்கள், அவரை பார்ப்பதற்கு, போலீஸ் அதிகாரிகளிடம், அனுமதி கோரினர்; போலீஸ் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். அங்கு வந்த தி.மு.க.,வினரை, போலீசார் விரட்டி அடித்தனர். டி.ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி, எஸ்.பி., கண்ணன் மற்றும், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு, 9:00 மணி வரை, எம்.எல்.ஏ.,விடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

- நமது நிருபர் -

மூலக்கதை