இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் வெறிச்சோடியது; தேவையில்லாமல் நடமாடியவர்கள் மீது வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் வெறிச்சோடியது; தேவையில்லாமல் நடமாடியவர்கள் மீது வழக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தேவையில்லாமல் சாலைகளில் நடமாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் தவறான நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ைக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னையை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



அதன்படி தமிழகத்தில் இதுவரை 1,34,226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் 76,158 பேரும், பிற மாவட்டங்களில் 58,068 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 85 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,898 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார். இதைத் தவிர்த்து ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, முதல் ஞாயிற்றுக்கிழமையான கடந்த 5ம் தேதி கடுமையான முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழகம் முழுவதும், ஊரடங்கு நீடித்தாலும், 6ம் தேதி முதல் அதிக தளர்வுகள் செய்யப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



மேலும் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் வழங்கவும், தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதைப்போன்று தேநீர் கடைகள் (பார்சல் சேவை மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கவும், காய்கறி கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டது. அதைப்போன்று மீன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகள், சலூன் கடைகளும் ஏற்கனவே அறிவித்தபடி சமூக இடைவெளியுடன் கடந்த ஒருவாரமாக செயல்பட்டு வந்தது.

மேலும் மற்ற செயல்பாடுகளைப் ெபாறுத்தவரை ஜூன் 19ம் தேதிக்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி அனைத்து செயல்பாடுகளும் கடந்த 6 நாட்களாக செயல்பட்டு வந்த நிலையில் இன்று 12ம் தேதி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி முதல் நாளை(திங்கட்கிழமை)காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.   இந்த ஊரடங்கு நேரத்தில் தளர்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி இல்லாததால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

பால், மருந்து, பத்திரிகை விற்பனை மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. மேலும் அரசு அனுமதி அளித்துள்ள வாகனங்கள் மற்றும் பால் மற்றும் மருத்துவ பணிகள் சார்ந்த வாகனங்கள் மட்டும் ஓடின.

அந்த வாகனங்களையும் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பிறகு தான் அனுமதித்தனர். இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், நெல்லை போன்ற முக்கிய நகரங்களில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மருந்து கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ தேவைக்கு தவிர யாரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரித்து இருந்தனர்.

அதையும் மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதைப்போன்று நடந்து செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னையின் முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கியமான சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்த முக்கிய சாலைகளை இணைக்கும் சாலைகளையும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. அதையும் மீறி காரணங்களே இல்லாமல் சாலைகளில் சென்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதைப்போன்று கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இந்த முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

மேலும் தமிழகம் முழுவதும் நகரின் உள்பகுதிகளில் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதைத்தவிர்த்து “ட்ரோன்” காமிரா மூலம் அனைத்து தெருக்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 14ம் தேதி  செவ்வாய் மாலை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது இன்னும் இரண்டு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவது போன்று ஆகஸ்ட் மாதத்தில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமுல்படுத்தலாமா? மாவட்டங்களுக்குள் பேருந்துகளை இயக்கலாமா? கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

.

மூலக்கதை