கேரள தங்கம் கடத்தல் விவகாரம்; தேடப்பட்டு வந்த குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் கைது: என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி

தினகரன்  தினகரன்
கேரள தங்கம் கடத்தல் விவகாரம்; தேடப்பட்டு வந்த குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் கைது: என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி

பெங்களூரு: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் அனுப்பப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சமீபத்தில் கைப்பற்றினர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சரித்குமார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரும் தூதரகத்தின் முன்னாள் ஊழியருமான ஸ்வப்னா சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். மாநில அரசின் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதைப்போல பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. எனவே இந்த கடத்தல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு  விசாரணை நடத்த மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஸ்வப்னா சுரேசை கைது செய்ய மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் மாநில அரசின் போலீசார் என பல்வேறு பிரிவினர் வலைவீசி தேடி வந்த நிலையில் தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் பெங்களூருவில் அவரை கைது செய்துள்ளனர். அவர் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் ? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டிருப்பது உறுதி என தெரிவித்திருக்கிறார்கள். நாளை காலை 11 மணிக்கு அவரை கொச்சியில் உள்ள NIA அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கேரளாவிலிருந்து ஸ்வப்னா சுரேஷ் தமிழகத்துக்குள் நுழைந்ததாக கருதப்பட்டது. அதனால் தமிழக போலீசார் உதவியுடன் அவரை தேடி வந்து உதவி நிலையில், அவரை தற்போது பெங்களூரில் கைது செய்து இருக்கிறார் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.

மூலக்கதை