இந்திய எல்லையில் பதற்றம்...! 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்; இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவல்

தினகரன்  தினகரன்
இந்திய எல்லையில் பதற்றம்...! 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்; இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்திய எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்திற்குள் நுழைவதற்காக 200 முதல் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் தயாராக இருப்பதாக, மூத்த ராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் ஊடுருவ எல்லையில் சிறப்பு தளங்களையும் அவர்கள் அமைத்து தயாராக இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து துணை ராணுவப்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எல்லையில் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நவ்காம் என்ற இடத்தில் நுழைவதற்கு தாயராக இருக்கின்றனர். இந்த நிலையில்தான் நமது ராணுவத்தினர் அந்த இடத்தில் எச்சரிக்கப்பட்டு இருந்தனர். அப்போது, எல்லையில் அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பு வேலி வழியாக நுழைய தயாராக இருந்த இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லை முழுவதும் உஷார் நிலையில் இருக்க ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். கடந்த ஜூன் 30 ஆம் தேதி பேட்டி அளித்த ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், எல்லையில் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைவதற்கு பயங்கரவாதிகள்  தயாராக இருக்கின்றனர் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை