'கொரோனாவை விட கடும் ஆபத்தான நோய்'
பீஜிங் : மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட ஆபத்தான ஒரு நோய் வேகமாக பரவி வருவதாக சீனா எச்சரித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.'கொரோனா வைரஸ் பற்றிய தகவலை சீனா மற்ற நாடுகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காதது தான் பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம்' என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.கஜகஸ்தான் நாட்டில் உள்ள சீன துாதரகம் அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு மக்களுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது;
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனாவை விட ஆபத்தான நோய் கஜகஸ்தான் முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 1772 பேர் பலியாகி உள்ளனர். ஜூனில் மட்டும் 628 பேர் பலியாகி விட்டனர்.கொரோனாவால் பலியானோரின் விகிதத்தை விட இந்த புதிய நோயால் பலியானோரின் விகிதம் அதிகமாக உள்ளது.
எனவே கஜகஸ்தானில் உள்ள சீன மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கஜகஸ்தானிலிருந்து சீனாவுக்கு வருவோர் பற்றிய தகவல் முன் கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய் செய்தி
கஜகஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'சீன துாதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மிகவும் தவறானது. உறுதி செய்யப்படாத ஒரு விஷயத்தை சீன துாதரகம் வெளியிட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.