சீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: அமெரிக்க செனட்டர்

தினமலர்  தினமலர்
சீனாவுக்கு எதிரான இந்திய நடவடிக்கை பெருமைக்குரியது: அமெரிக்க செனட்டர்

வாஷிங்டன்: 'எல்லையில், சீன ஆக்கிரமிப்பை, இந்தியா துணிச்சலாக எதிர்ப்பது பெருமைக்குரியது. இதன் மூலம், சீனாவை எதிர்கொள்வதில் அச்சம் தேவையில்லை என்பதை, மற்ற நாடுகள் உணர்ந்திருக்கும்' என, அமெரிக்க செனட்டர் தெரிவித்துள்ளார்.


கிழக்கு லடாக் அருகே, இந்திய -- சீன எல்லைப் பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. அமைதிப் பேச்சில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதை அடுத்து, சீனப் படையினர், பின் வாங்கினர். இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க குடியரசுக் கட்சியை சேர்ந்த, செனட்டர் ஜான் கென்னடி, நேற்று முன் தினம் கூறியதாவது:சீனாவை, எந்த நாடுமே நம்பத் தயாராக இல்லை. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா உள்ளது. எனவே, அந்நாட்டை எதிர்க்க, மற்ற நாடுகள் அஞ்சுகின்றன.தற்போது, சீனாவுக்கு எதிராக இந்தியா நிற்கிறது. ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், சீனாவுக்கு எதிரான தங்கள் நிலைபாட்டை தெளிவுபடுத்தி உள்ளன.


விதிமுறைகளை மதிக்கவில்லை என்றால், எந்த நாடும், சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளாது என்பதை, அவர்களுக்கு உணர்த்த வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அதை நிறைவேற்ற வேண்டும்.சீனாவைக் கண்டு அஞ்சி, எல்லா நாடுகளும் ஓடி ஒளிந்து கொள்வதில்லை. இந்தியாவைப் போன்ற சில விதிவிலக்குகளும் உள்ளன. எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில், சீனாவுக்கு எதிராக நின்ற, பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது.இதன் மூலம், சீனாவைக் கண்டு அச்சம்கொள்ள தேவையில்லை என்பது, பிற நாடுகளுக்கு, விளங்கி இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை