விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்

தினமலர்  தினமலர்
விகாஷ் துபே என்கவுன்டர் குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்

உ.பி.யில் ரவுடி விகாஷ் துபே என்கவுன்டர் குழுவுக்கு தலைமை வகித்தவர் தமிழகத்தைச்சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.

தமிழகத்திலுள்ள, சேலம் மாவட்டம், கொளத்துார், லக்கம்பட்டி ஊராட்சி, மலையடிவாரமுள்ள சின்னதண்டாவைச் சேர்ந்த, விவசாயி பிரபு, 63. இவரது மனைவி சுபத்ரா, 54. இவர்களது, ஒரே மகன் தினேஷ்குமார், 33. இவர், பள்ளி படிப்பை, மேட்டூர் செயின்ட்மேரீஸ், சேலம் வித்யாமந்திர், ஈங்கூர் கங்கா மெட்ரிக் பள்ளிகளில் முடித்தார். கோவை வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., முடித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினார்.



கடந்த, 2009ல், ஐ.பி.எஸ்.,சுக்கு தேர்வான தினேஷ்குமார், தற்போது உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்ட எஸ்.எஸ்.பி., எனப்படும், சிறப்பு காவல் கண்காணிப்பாளராக உள்ளார். தினேஷ்குமார் தலைமையிலான போலீஸ் குழுவினர் தான், ரவுடி விகாஸ் துபேவை, என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து, தினேஷ்குமாரின் தந்தை பிரபு கூறுகையில், ''விவசாயம் செய்து தான் மகனை படிக்க வைத்தேன். மகன், சிறு வயது முதலே, நேர்மையாக இருக்கவே விரும்புவான். போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடியை, என் மகன் தலைமையிலான குழுவினர் சுட்டுக் கொன்றது பெருமை அளிக்கிறது,'' என்றார். தாய் சுபத்ரா கூறுகையில், ''என் மகன், கடைசியாக வீட்டுக்கு வந்து, ஒன்றரை ஆண்டு ஆகிறது. ஒரே மகன் எங்களோடு சேர்ந்திருந்தால் தான் மகிழ்ச்சி. எனினும், தற்போது மற்றொரு மாநிலத்தில், சிறப்பாக பணிபுரிவது பெரும் மகிழ்ச்சி,'' என்றார்.

a

மூலக்கதை