கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமல்ல...அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்க: யுஜிசி.க்கு ராகுல் காந்தி கோரிக்கை!

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமல்ல...அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்க: யுஜிசி.க்கு ராகுல் காந்தி கோரிக்கை!

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துலா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்வுகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு ஆண்டின் இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த தேர்வுகளை நடத்துவதா ரத்து செய்து விட்டு முந்தைய பருவ தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதா என மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாடுமுழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. அறிவித்தது. இதை தொடர்ந்து , கொரோனா பேரிடரக்கு இடையே தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் துவங்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக பேசுங்கள் என்ற விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமல்ல. மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கைகளை யுஜிசி கட்டாயம் கேட்க வேண்டும். அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதோடு முந்தைய தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடுகளை பொறுத்து மாணவர்களை மேல் வகுப்புக்கு அனுமதிக்க வேண்டும், என கூறியுள்ளார்.

மூலக்கதை