பேஸ்பால் போட்டியில் சியர் கேர்ள்ஸ் ஆக மாறிய ரோபோக்கள்

தினமலர்  தினமலர்
பேஸ்பால் போட்டியில் சியர் கேர்ள்ஸ் ஆக மாறிய ரோபோக்கள்

டோக்கியோ: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விளையாட்டுத்துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகெங்கிலும் நடத்தப்பட இருந்த கிரிக்கெட், டென்னிஸ், பேஸ்பால் உள்ளிட்ட சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. பார்வையாளர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து அமர்ந்து போட்டியை கண்டுகளிப்பது மிகக் கடினம்.

இதனால் ஸ்டேடியம் உரிமையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை மிகக் குறைவாகவே இருக்கும். இதனால் அவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படும். ஆங்காங்கே கிரிக்கெட் போட்டிகள் பார்வையாளர்களே இல்லாமல் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஜப்பானில் பேஸ்பால் போட்டி மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த ரோபோக்கள் டெர்மினேட்டர் படத்தில் வரும் அர்னால்ட் போல கவச மனிதனாக காட்சியளிக்கின்றன. இவை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து நடனமாடி போட்டியை வேறு தளத்திற்கு கொண்டு செல்கின்றன.


பேஸ்பால் விளையாட்டில் கோல் போடும் அணிக்கு சியர் கேர்ள்ஸ் டான்ஸ் ஆடுவது, கொடியை அசைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வார். இந்த வேலைகளை தற்போது ரோபோக்கள் செய்து வருகின்றனர். இந்த ரோபோக்களை நேரில் காணவே பலர் டிக்கெட் வாங்கி மைதானத்தில் போட்டியை கண்டுகளித்தனர்.

போட்டி நடைபெற்றபோது இந்த ரோபோக்களின் அசைவுகள் பார்வையாளர்களால் வீடியோ எடுக்கப்பட்டன. இந்த வீடியோக்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. டுவிட்டரில் 63 ஆயிரம் பார்வையாளர்களை பெற்ற இந்த ரோபோ டான்ஸ் ஹாட் டாப்பிக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபுக்குவாக்கா சாஃட்பேங்க் ஹாக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இந்த ரோபோக்களைத் தயாரித்துள்ளது.

மூலக்கதை