நீலம், ஜீலம் நதிகளின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு: சீனாவை கண்டித்து பாகிஸ்தானில் போராட்டம்!!!

தினகரன்  தினகரன்
நீலம், ஜீலம் நதிகளின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு: சீனாவை கண்டித்து பாகிஸ்தானில் போராட்டம்!!!

இஸ்லாமாபாத்: நீலம், ஜீலம் நதிகளின் குறுக்கே அணை கட்டும் நடவடிக்கையை எதிர்த்து சீனாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முசாபராபாத் நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்னர் சீன ஒப்பந்த நிறுவனமான சீனா த்ரி கோர்ஜெஸ் கார்ப்பரேஷன் மற்றும் சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் 18 ஆயிரம் கோடி மதிப்பில் 1124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க நீர்மின் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முசாபராபாத் அருகே கொஹலா என்ற இடத்தில் நீலம், ஜீலம் நதிகளுக்கு குறுக்கே பிரம்மாண்ட அணை நீர்மின் நிலையத்துடன் கட்டப்படவுள்ளது. சீனாவுடன் இணைந்து நீலம், ஜீலம் மற்றும் கொஹலா நீர்மின் திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கக்கூடிய இந்த திட்டங்களால் நதிகள் பாதிக்கப்படும் என்று கூறி முசாபராபாத் நகரில் போராட்டம் நடைபெற்றது. நதிகளை ஆக்கிரமிக்கும் இது போன்ற செயல்கள் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் விதிகளை மீறிய செயல் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த பிரச்சனையை சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல  #SaveRivers என்ற பெயரில் ஹாஸ்டேக்குகளுடன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இந்த திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மூலக்கதை