இந்தியா உதவியில் நேபாளத்தில் சமஸ்கிருத பள்ளி கட்டடம் திறப்பு
காத்மாண்டு: நேபாளத்தில் இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட சமஸ்கிருத பள்ளிக் கட்டடம் திறக்கப்பட்டது.
நேபாளத்தில் லாம் மாவட்டத்தில் 2009 முதல் ஸ்ரீ சப்தமய் குருகுல சமஸ்கிருத வித்யாலயா என்ற வேத பாடசாலை இயங்கி வருகிறது.இங்கு வேத பாடங்களுடன் நவீன கல்வியும் போதிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு இந்தியா 1.94 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடி கட்டடம் கட்டித் தந்துள்ளது.
இதன் திறப்பு விழா 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் நேபாள கல்வித் துறை அதிகாரிகள் இந்திய துாதரக அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய கட்டடத்தில் 10 வகுப்பறைகள் மாணவர்கள் தங்க ஒன்பது அறைகள் குழு கல்விக்கு நான்கு அறைகள் கருத்தரங்கு கூடம் வரவேற்பறை உள்ளிட்டவை உள்ளன.
நேபாளத்தில் 2015ல் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 9000 பேர் இறந்தனர். ஏராளமான கட்டடங்கள் தரை மட்டமாயின.இதையடுத்து அங்கு இந்தியாவின் நிதியுதவியில் ஏராளமான பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டன.