வேகமாக பரவும் 'உண்ணி நோய்': பீதியை ஏற்படுத்தும் சீனா

தினமலர்  தினமலர்
வேகமாக பரவும் உண்ணி நோய்: பீதியை ஏற்படுத்தும் சீனா

பீஜிங் : சீனாவில், 'மார்மோட்' எனப்படும் அணில் வகையைச் சேர்ந்த பிராணியின் மாமிசத்தை சாப்பிட்ட சிலருக்கு, உண்ணி நோய் ஏற்பட்டுள்ளது. 'இது, மிகவும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது' என, சீனாவைச் சேர்ந்த நகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது புதிய பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு இறுதியில் துவங்கிய, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு இன்னும் அடங்கவில்லை. இதற்கிடையே, பன்றிகள் மூலம், ஜி - 4 என்ற வைரஸ் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக, சீன விஞ்ஞானிகள், சமீபத்தில் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், சீனாவின் வடக்கே உள்ள மங்கோலியாவைச் சேர்ந்த, பயானுார் நகரம், புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, சீன பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:மார்மோட் எனப்படும் அணிலின் இறைச்சியை பச்சையாக சாப்பிட்டதால், மங்கோலியாவின் பயானுார் நகரில், கடந்தாண்டு இரண்டு பேர் உயிரிழந்தனர். ஆனால், அது தொடர்பாக, எந்த விசாரணையும் நடக்கவில்லை.

இந்நிலையில், அந்த நகரில், சமீபத்தில், 27 வயது இளைஞர் மற்றும் அவருடைய, 17 வயது சகோதரருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், மார்மோட் உட்பட சிறிய வகை பிராணிகளின் உடலில் தங்கியிருக்கும் உண்ணிகள், அந்த பிராணிகளின் இறைச்சியில் சேருவதால், இவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

திடீரென கடும் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, நிணநீர் கட்டிகள் உருவாவது போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால், 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் அபாயமும் உள்ளது. தற்போது, இரண்டு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அவர்களுடன் பழகிய, 146 பேர் தனிமைபடுத்தப்பட்டு, பரிசோதனைகள் நடக்கின்றன.

இந்த உண்ணி நோய், பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது. இது, மிக மிக வேகமாக பரவும் அபாயம் உள்ளது. அதனால், இது போன்ற பிராணிகளின் இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை