3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி

லண்டன்: இங்கிலாந்தில் மதுக்கடை மற்றும் பார்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்ட  நிலையில், குடித்துவிட்டு வருபவர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க  முடியவில்லை என்று மாநகரின் போலீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் மதுபான பார்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன.

மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் சுகாதார பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்களும், அமைச்சர்களும் தெரிவித்திருந்தனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலையை தவிர்க்க அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி லண்டன் உள்ளிட்ட பிரிட்டனின் பல இடங்களில் மதுபான விடுதிகள் (பார்கள்) திறக்கப்பட்டன.

3 மாதமாக அடைப்பட்டு கிடந்த பெருந்திரளான மக்கள் மதுபான  விடுதிகளில் அருகருகே அமர்ந்து மது அருந்தும் ஏராளமான படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. இவை பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை  எழுப்புவதாக கூறப்படுகிறது.   இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சின் போலீஸ் கூட்டமைப்பு அதிகாரி ஜான் ஆப்டர் கூறுகையில், ‘மது குடித்துவிட்டு வருபவர்களால் நிச்சயம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது.

அவர்கள் அவ்வாறு பின்பற்ற மாட்டார்கள் என்பதும் மிகவும் தெளிவாக தெரிகிறது.

முதல்நாள் இரவு மிகவும் பரபரப்பான இரவாக அமைந்தது.

போலீஸ் அதிகாரிகள் முடிந்தவரை சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தினர். சில பகுதிகளில் பிரச்னைகள் ஏற்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.


.

மூலக்கதை