அரசியல் தலைவர்களின் சிகை அலங்கார மாற்றம்!
புதுடில்லி: பிரதமர் மோடி, சமீபத்தில், 'டிவி' வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய போது, அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்த்து பலர் வியந்தனர். மோடியின் மீசை, வழக்கத்தை விட நீண்டிருந்தது; தாடியும் வளர்ந்திருந்தது.
'டிவி'யில் வரும் போது தோற்றப்பொலிவு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், மிகவும் கவனமாக இருப்பவர், மோடி. எந்த கோணத்தில் படம் பிடிக்க வேண்டும் என்பதையும், கேமராமேனிடம் சொல்வார். அந்த அளவிற்கு தன் இமேஜ் மீது நாட்டம் கொண்டவரிடம் ஏன் இந்த மாற்றம்...
பிரதமருக்கென பிரத்யேக சிகை அலங்கார கலைஞர் உண்டு. ஆனால், ஊரடங்கின் போது, நாடு முழுதும் சலுான் மூடப்பட்டுள்ளது. வளர்ந்த தலைமுடியை திருத்திக் கொள்ள முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். எனவே, அப்படிப்பட்ட மக்களோடு மக்களாக இருப்பதை வெளிப்படுத்தும் நோக்கில் தான், சிகை அலங்காரத்தை நிறுத்தி விட்டார் மோடி என, சொல்லப்படுகிறது.
மோடி மட்டுமின்றி, வேறு சில தலைவர்களும் கூட, தங்களுடைய முடி ஸ்டைலை, மாற்றியுள்ளனர். காங்., - எம்.பி., ராகுல், தலை முடியை மாற்றி, தன் தந்தை ராஜிவ் போல காட்சியளிக்கிறார். நம்ம ஊர் ஸ்டாலினும், தன் ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். இதற்கு, சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள்!