அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் தெரிந்த சந்திர கிரகணம்

தினமலர்  தினமலர்
அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் தெரிந்த சந்திர கிரகணம்

வாஷிங்டன்: இன்று (ஜூலை 05) தோன்றிய பெனும்பிரல் (புறநிழல் கிரகணம்) சந்திர கிரகணம், அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் மிகுதியாக தெரிந்தது.

2020ம் ஆண்டு, ஜனவரி 10 மற்றும் ஜூன் 5ம் தேதிகளில் சந்திர கிரகணத்தையும், ஜூன் 21ல் சூரிய கிரகணத்தையும் கண்டுள்ள இவ்வுலகம், இன்று மீண்டும் சந்திர கிரகணத்தை கண்டுள்ளது. அதிலும் கடந்த ஒரு மாத இடைவெளியில் 3 கிரகணம் நிகழ்ந்துள்ளது. இதனை விஞ்ஞானிகள், வானியல் ஜோதிட வல்லுனர்கள் அரிய நிகழ்வாக கருதுகின்றனர். இன்று நிகழ்ந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் (புறநிழல் கிரகணம்) என்றழைக்கப்படுகிறது. அதாவது கிரகணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழும்.

மேலும், இந்த கிரகணத்தின்போது, சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். புறநிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும். கிட்டதட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு நிகழும் இந்த கிரகணம், நம் நாட்டில் காலை 8:38 மணிக்கு துவங்கி பகல் 11:21க்கு முடிந்ததது. கிரகணத்தின் போது இந்தியா, அடிவானத்திற்கு கீழே இருப்பதால் நமக்கு பகல் நேரத்தில் தோன்றியுள்ளது. இதனால் நம் நாட்டில் பார்க்க முடியாது.

சந்திர கிரகணத்தின் அதிகபட்ச கட்டத்தில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் வழக்கமான பெளர்ணமியை விட சந்திரன் இருண்டதாக தோன்றியுள்ளது. தெற்கு / மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி, வட அமெரிக்காவின் பெரும்பகுதி, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிகா ஆகிய இடங்களிலும் தெரிந்துள்ளது. அடுத்த சந்திர கிரகணம் வரும் நவ., 29 மற்றும் 30 தேதிகளில் தோன்ற இருக்கிறது. இது, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்காவில் தெரியும்.

மூலக்கதை