முதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு 'அப்செட்'

தினமலர்  தினமலர்
முதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு அப்செட்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல் நலம் குறித்து, முதல்வர் விசாரிக்காதது, கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில், கொரோனா நோயை கட்டுப்படுத்த, ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை, முதல்வர் நியமித்தார். இக்குழுவில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இடம் பெற்றிருந்தார். அடையாறு, சோழிங்கநல்லுார் உட்பட, மூன்று மண்டலங்களில், நோய் தடுப்பு பணிகளை, ஒருங்கிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். கடந்த மாதம், அன்பழகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.



தனியார் மருத்துவமனையில், பரிசோதனைக்கு சென்றார். கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியானது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அவரை தொடர்பு கொண்டு பேசினார்.அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா ஏற்பட்டுள்ளது குறித்து, செய்தியாளர்கள், முதல்வரிடம் கேட்ட போது, 'அதை அவரே மறுத்து விட்டார்' என, பதில் அளித்தார். ஜூன், 30ம் தேதி, மியாட் மருத்துவமனை சார்பில், வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‛அமைச்சர் அன்பழகனுக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது' என, கூறப்பட்டிருந்தது.
அதன்பிறகும், அமைச்சரை தொடர்புகொண்டு, முதல்வர் பேசவில்லை. இது, அமைச்சர் தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் தரப்பு கூறியதாவது:



தி.மு.க.,- - எம்.எல்.ஏ., அன்பழகனுக்கு, கொரோனா தொற்று உறுதியானதும், முதல்வர், மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசினார். சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று, சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

ஆனால், அமைச்சர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதை, முதல்வரோ, அமைச்சரோ கண்டுகொள்ளவில்லை. நேற்று முன்தினம், எம்.எல்.ஏ.,க்கள் சதன் பிரபாகர், குமரகுரு ஆகியோர், கொரனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களிடம், மொபைல் போனில் நலம் விசாரித்ததாக, முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால், அமைச்சர் குறித்த எந்த தகவலையும், அவர் வெளியிடவில்லை.இவ்வாறு, அந்த தரப்பு கூறியது.

மூலக்கதை