மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி

தினமலர்  தினமலர்
மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி

யாங்கன் : மியான்மர், மரகத சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 162 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 54 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான மியான்மர், மரகத சுரங்கத் தொழிலில் பெயர் பெற்றது.இங்கு, யாங்கூன்நகரில் இருந்து, 950 கி.மீ., துாரத்தில், ஹபாகந்த் நகரில் மரகத சுரங்கப் பணிகள் நடைபெறுகின்றன. நேற்று, இப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்த, 54 பேரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அத்துடன், மண்ணில் புதைந்திருந்த, 50 பேரின் சடலங்கள் முதலில் மீட்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 112 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து பலி எண்ணைக்கை 162 ஆக அதிகரித்துள்ளதாக மியான்மர் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. சுரங்கப்பணிகளில், 200க்கும் அதிகமானோர் ஈடுபட்டிருந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. மலையடிவாரத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெறுவதால், அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதாக, சுற்றுப்புறத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை