பணத்தின் மீது பற்று வையுங்கள்: பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்

தினமலர்  தினமலர்
பணத்தின் மீது பற்று வையுங்கள்: பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்

லண்டன் : சமீபத்தில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் அதிகமாக பணம் உள்ள மனிதர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

காலாகாலமாக பணம் நமக்கு நிம்மதியை தராது, பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என நமக்கு பதிக்கப்பட்டிருக்கும் கொள்கைகளைத் தகர்த்து எறிந்து உள்ளது இந்த ஆய்வு. பணம் இருப்பவர்களும் அதிக பணத்தை கையில் வைத்திருப்பவர்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்க்கையின்மீது பற்றுடனும் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

1972 முதல் 2016 வரை பிறந்த 30 பேரிடம் நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. வாழ்க்கையில் சாதித்தவர்கள், அதிகமாக பணம் ஈட்டுபவர்கள் ஒருபக்கமும், வாழ்க்கையில் அதிக பணம் ஈட்ட முடியாமல் தோற்றதாக நினைப்பவர்கள் மறுபக்கமும் அமர்த்தப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களது மனநிலை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து கணிக்கப்பட்டது. இதில் வாழ்க்கையில் பணம் ஈட்டுபவர்கள், பணம் ஈட்ட முடியவில்லை என வருந்துபவர்களைக் காட்டிலும் மிகவும் மகிழ்ச்சியாகவும் வளத்துடனும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பணம் தங்களுக்கு ஒருவித நம்பிக்கை அளிப்பதாகவும், வாழ்க்கை மீதான பற்றை அதிகரிப்பதாகவும் அதிக பணம் இடுபவர்கள் தெரிவித்துள்ளனர். பணத்தை பார்க்கப்பார்க்க அதனை மேலும் ஈட்டவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். ஒருமுறை பணத்தைப் பார்த்து விட்டால் அது ஒரு போதை போல ஆகிவிடும் என கூறுபவர்களும் உண்டு.


இந்தியாவிலும் பல செல்வந்தர்கள் முதல்முறை பார்த்த பின்னர் அடுத்தடுத்து தொழில் செய்து முன்னுக்கு வந்த கதை உண்டு. திருபாய் அம்பானி முதல் ஜாம்ஷெட்ஜி டாடாவரை அனைவருமே இப்படித்தான். நம்மால் பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை ஒரு மனிதனுக்கு வரும்போதுதான் அவனுக்கு வாழ்க்கைமீது ஒரு பிடிப்பு உருவாகிறது.

நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணமும் வருகிறது என இந்த ஆராய்ச்சி கூறுகிறது. அதிக பணம் ஈட்டி வசதியாக வாழ நினைத்து தோற்றுப் போனவர்கள் வாழ்க்கையை வெறுத்து மரணத்தை வரவேற்க காத்திருக்கின்றனர். ஆனால் சிறு தொழில் செய்தாலும் அதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிக லாபம் ஈட்டினார் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கு ஒரு குறைந்த அளவு லாபம் கூட வாழ்க்கை மீதுள்ள பற்றை அதிகரிப்பதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக பணம் ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோளை நாம் அனைவரும் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு பணம் ஈட்டும்போது நம்மீது நம்பிக்கை அதிகமாகி நாம் மகிழ்ச்சியாக வாழ அது வழிவகுக்கிறது. பணத்தின் மீது அதிக பற்று இல்லாதவர்களும் இந்த முயற்சியை செய்துபார்த்தால் மகிழ்ச்சி உறுதி என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மூலக்கதை