அரசு பங்களாவை காலி செய்ய பிரியங்காவுக்கு 1 மாதம் கெடு
புதுடெல்லி: ‘டெல்லியில் குடியிருக்கும் அரசு பங்களாவை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்,’ என்று பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், மத்திய அரசையும், பிரதமர் மோடியை கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தினமும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், இவர்கள் மீது பாஜ அரசு கடும் அதிருப்தியில் இருக்கிறது. பிரியங்காவுக்கு மத்திய அரசின் சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்த பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு, டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, டெல்லியில் பிரியங்காவுக்கு பங்களா ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இதை காலி செய்யும்படி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், `பிரியங்கா காந்தி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அல்லது அதற்கு முன்பாக பங்களாவை காலி செய்யும்படி கேட்டு கொள்ளப்படுகிறார். மீறும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு சேதார கட்டணம், அபராத வாடகை வசூலிக்கப்படும். ’என்று கூறப்பட்டுள்ளது.