மத்திய அரசு , ராகுல் குற்றச்சாட்டு கொரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க முயற்சி

தினகரன்  தினகரன்
மத்திய அரசு , ராகுல் குற்றச்சாட்டு கொரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க முயற்சி

புதுடெல்லி: கொரோனா தொற்று மோசமானது அல்ல என்ற கண்ணோட்டத்தை மக்களிடையே ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள் தினத்தையொட்டி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டெல்லியில் பணியாற்றும் இந்திய செவிலியர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி மூலம் நேற்று 30 நிமிடங்கள் உரையாடினார். பின்னர், அவர் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிராக மக்களை பாதுகாக்க ஆயுதமின்றி போராடும் மருத்துவர்கள் அனைவரும் அகிம்சையின் ராணுவ வீரர்கள். இவர்களிடம் பேசிய போது, டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர் விபின் கிருஷ்ண‍ன் தெரிவித்தார். ஒரு நோயாளிக்குக் கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பது கூட தெரியாமல் எப்படி சிகிச்சை அளிப்பது? அல்லது அவரை எந்த வார்டில் அனுமதிப்பது? என்று கூட தெரியவில்லை என்று வேதனைப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவதாக அவர்களுக்கு உறுதி அளித்தேன். கொரோனா ஒன்றும் நீங்கள் நினைப்பது போல், மோசமானது அல்ல என்ற கண்ணோட்டத்தை மக்கள் இடையே உருவாக்க அரசு முயற்சிக்கிறது. கொரோனாவுடன் போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த தென் இந்தியாவைச் சேர்ந்த இரு செவிலியர்களுக்கு டெல்லி அரசு அறிவித்த ரூ.1 கோடி இழப்பீடு வழங்காதது கவலையளிக்கிறது. இழப்பை பணத்தால் ஈடுகட்ட முடியாது என்ற போதிலும், பாதித்த குடும்பங்களுக்கு அந்த பண உதவி ஆறுதலாக இருக்கும் என்பதால் டெல்லி அரசு உதவ வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

மூலக்கதை