சிறப்பு விமானத்தில் வர சீன அரசு அனுமதி மறுப்பு

தினமலர்  தினமலர்
சிறப்பு விமானத்தில் வர சீன அரசு அனுமதி மறுப்பு

பீஜிங்; சிறப்பு விமானத்தில், இந்தியர்கள் சீனா வருவதற்கு, அந்நாடு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை, 'ஏர் இந்தியா' விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது. அதுபோல, இந்தியாவில் இருந்தும், ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், ஜூன், 21ல் இந்திய துாதர்களின் குடும்பத்தினர், பன்னாட்டு வங்கி உயரதிகாரிகள் உள்ளிட்ட, 100 பேர், இந்தியாவில் இருந்து, சிறப்பு விமானம் மூலம், சீனாவின் ஷாங்காய் நகர் சென்றனர். அதில், இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்தது. அத்துடன், அவர்களுடன் நெருக்கமாக இருந்த, 47 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து சிறப்பு விமானத்தில் வருவோருக்கு, சீனா தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதனால், நேற்று பயணியர் இல்லாமல், ஏர் இந்தியா விமானம், சீனாவின் குவாங்சோ சென்று, அங்கிருந்து, 86 பேரை அழைத்து வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை