ஊரடங்கை நீட்டிக்கும்படி அரசுக்கு பரிந்துரைக்கவில்லை: நிபுணர் குழு

தினமலர்  தினமலர்
ஊரடங்கை நீட்டிக்கும்படி அரசுக்கு பரிந்துரைக்கவில்லை: நிபுணர் குழு

சென்னை : ''கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. எனவே, முழு ஊரடங்கு நீட்டிப்பை, நாங்கள் பரிந்துரை செய்யவில்லை. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், கட்டுப்பாடுகள் அவசியம்.''சென்னையில் நோய் பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகளை, பிற மாவட்டங்களிலும் பின்பற்ற, பரிந்துரை செய்துள்ளோம்,'' என, மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்

ஏழாவது கூட்டம்



தமிழகம் முழுதும், நாளை நள்ளிரவு, 12:00 மணியுடன், ஊரடங்கு நிறைவடைகிறது. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, மருத்துவ நிபுணர் குழுவினருடன், நேற்று சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.அதன்பின், மருத்துவ நிபுணர் குழுவினர் அளித்த பேட்டி: பிரதீப் கவுர், துணை இயக்குனர், தேசிய தொற்று நோய் நிலையம்:
மருத்துவ நிபுணர் குழுவின், ஏழாவது கூட்டம், இரண்டு மணி நேரம் நடந்தது. தனித்தனியே எங்கள் கருத்துக்களை தெரிவித்தோம். கடந்த கூட்டத்தில், பரிசோதனையை அதிகரிக்கும்படி தெரிவித்தோம்; அதை அரசு செய்துள்ளது.

சென்னையில், தினமும், 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. தமிழகம் முழுதும், 32 ஆயிரம் சோதனை நடத்தப்படுகிறது. சோதனை நடத்தினால் தான், ஆரம்ப நிலையிலேயே, நோயை கண்டறிய முடியும். உடனடியாக, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.கடந்த இரு வார தகவல்களை பார்க்கும் போது, திருச்சி, மதுரை, வேலுார், திருவண்ணாமலை நகரப் பகுதிகளில், நோய் பரவல் அதிகரித்துள்ளது. சென்னையில் எடுத்த நடவடிக்கையை, மற்ற நகரங்களில் மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில், காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுவது, நல்ல விஷயம். இதை நடத்தியதால், நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய முடிந்தது. எனவே, நோய் அதிகரிக்கும் இடத்தில், காய்ச்சல் முகாம் நடத்தும்படி கூறியுள்ளோம்.காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறல், வாசனை, ருசி தெரியாதது போன்ற அறிகுறி இருந்தால், மக்கள் காய்ச்சல் முகாம் செல்ல வேண்டும்; அங்கு பரிசோதனை செய்வர்.சென்னையில் எண்ணிக்கை அதிகரிப்பதால், மக்கள் பயப்படுகின்றனர். நிறைய சோதனை நடத்தி உள்ளோம். இதனால், நோய் பரவல் குறைய துவங்கி உள்ளது.

கவலை வேண்டாம்



இதை தொடர வேண்டும்; இறப்பை குறைக்க வேண்டும். ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிய வேண்டும். விரைவாக, மருத்துவமனைக்கு வந்தால், இறப்பை தடுக்க முடியும். எனவே, எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து, கவலைப்பட தேவையில்லை.
நோயை கட்டுப்படுத்த, ஊரடங்கு மட்டும் சிறந்த தீர்வு கிடையாது. ஆனாலும், சில நேரங்களில் தேவைப்படுகிறது. சென்னையில் ஊரடங்கால், நோய் இரட்டிப்பாவது குறைந்துள்ளது; நோய் பரவலும் குறைந்துள்ளது. ஆனால், ஊரடங்கில் எப்போதும் இருக்க முடியாது.

நோய் பரவல்; பரிசோதனையில் எத்தனை பேருக்கு நோய் ஏற்படுகிறது; இறப்பு விகிதம் உட்பட, பல்வேறு தகவல் அடிப்படையில், மாவட்ட நிலையை கணக்கிடுகிறோம்.எந்த பகுதியில், நோய் பரவல் அதிகம் உள்ளதோ, அங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அனைத்து இடங்களிலும், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டியதில்லை.பொது போக்குவரத்தால், நிறைய மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரித்தது. எனவே, பொது போக்குவரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது ஊரடங்கை, நாங்கள் பரிந்துரை செய்யவில்லை

தடுக்க முடியும்



ஊரடங்கு இருந்தாலும், மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில், மக்கள் நடமாடுவர். லேசான அறிகுறியுடன் நடமாடினால், மற்றவர்களுக்கு நோய் பரவும். அதுபோன்ற நபர்கள், உடனடியாக பரிசோதனை செய்து கொண்டால், நோய் பரவலை தடுக்க முடியும். டாக்டர் ராமசுப்பிரமணியம், அப்பல்லோ மருத்துவமனை, தொற்று நோய் ஆலோசகர்:
கொரோனா குறித்து, நிறைய பேர் பயப்படுகின்றனர். 80 சதவீதம் பேருக்கு, லேசான நோய் தாக்குதல் வந்துள்ளது. எனவே, நோய் அறிகுறி இருந்தாலே, தங்களை தனிமைப்படுத்த வேண்டும். சோதனை முடிவு வர தாமதமானாலும், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நோய் எண்ணிக்கை அதிகமாவதால், சிகிச்சை மீது கவனம் செலுத்த வேண்டும். ரத்தம் உறைவதை தடுக்க மருந்து உட்பட, சில சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றை முறைப்படுத்தி, எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை, அனைத்து மருத்துவமனைகளுக்கும் தெரிவிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கால் பயன்



வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு சோதனை செய்ய வேண்டும். 94 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பொது மக்கள் முக கவசம் அணியாமல், வெளியில் வரக்கூடாது. நோய் அறிகுறி தெரிந்தாலே, தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், நோயை தடுக்க முடியும்.
சோதனையை அதிகப்படுத்தும் போது, பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். இது குறித்து பயப்பட வேண்டியதில்லை. இதை குறைக்க, பரிந்துரை செய்துள்ளோம். ஊரடங்கு என்பது மிகப்பெரிய ஆயுதம். ஊரடங்கு என்பது, கோடாரியை எடுத்து கொசுவை ஒழிப்பது போன்றது.
ஆனால், ஊரடங்கால் பலன் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து நீட்டிப்பதில் பயனில்லை. வேறு யுக்தியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பரிந்துரை செய்துள்ளோம்.
குகானந்தம், தொற்று நோய் தடுப்பு நிபுணர்:


மக்களிடம் பீதி உள்ளது. மருத்துவமனை செல்ல பயப்படுகின்றனர். நோய் அறிகுறி தெரிந்தால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என, தெரிவித்தோம்.சென்னையில் எடுத்த நடவடிக்கைகளை, மற்ற மாவட்டங்களில், பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊரடங்கால் பயன் கிடைத்துள்ளது. எனினும், சமூகப் பொருளாதார விஷயம் காரணமாக, ஊரடங்கை நீட்டிக்க முடியாது.

இறப்பு விகிதம் குறைவு



காய்ச்சல், இருமல், உடல் சோர்வு போன்ற நோய் அறிகுறி இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதிப்புக்கு ஆளானோர் தனிமையில் வைக்கப்படும் போது, மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படுகிறது. சோதனைகளை அதிகப்படுத்தும் போது, நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அதை பற்றி கவலைப்படாமல், இறப்பை தடுப்பதில், கவனம் செலுத்த வேண்டும்.அரசு எடுத்த நடவடிக்கையால், இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன. உயர் தர மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும், ஒரே சிகிச்சை முறை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை