டிரம்புக்கு எதிராக பிடி வாரண்ட் 'இன்டர்போலி'டம் ஈரான் உதவி

தினமலர்  தினமலர்
டிரம்புக்கு எதிராக பிடி வாரண்ட் இன்டர்போலிடம் ஈரான் உதவி

டெஹ்ரான்: தன் முக்கிய படைத் தளபதியின் கொலை வழக்கில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படி, சர்வதேச போலீஸ் அமைப்பான, 'இன்டர்போலின்' உதவியை, மேற்காசிய நாடான ஈரான் நாடியுள்ளது.

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்ததையடுத்து இரு நாட்டுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஈரான் ராணுவத்தின் முக்கிய படை தளபதியான, ஜெனரல், குவாசிம் சுலைமானி, ஈராக்கின் பாக்தாதில், அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்.



இந்நிலையில், குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட வழக்கில், டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை, ஈரான் குற்றவாளிகளாக கூறியுள்ளது. அவர்கள் மீது கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் உள்ளிட்டோரை கைது செய்து ஒப்படைக்கும்படி, இன்டர்போலின் உதவியை, ஈரான் நாடியுள்ளது. ஆனால், மற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

ஈரானின் இந்தக் கோரிக்கை குறித்து, ஐரோப்பிய நாடான பிரான்சின் லியானை தலைமையிடமாக வைத்து செயல்படும், இன்டர்போல் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
இன்டர்போல் விதிகளின்படி, அரசியல் காரணங்களுக்கான இது போன்ற கோரிக்கைகள் ஏற்கப்படாது. அதனால், டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பில்லை.
இருப்பினும், ஈரானின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.

மூலக்கதை