இந்திய - சீன எல்லை பதற்றத்தை பயன்படுத்தி டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: உச்சக்கட்ட பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய  சீன எல்லை பதற்றத்தை பயன்படுத்தி டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: உச்சக்கட்ட பாதுகாப்பு

புதுடெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி போலீசார் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளன. இந்திய - சீனா ராணுவப் படைகளுக்கு இடையே எல்லையில் ஏற்பட்ட மோதலால் உண்டான  பதற்றத்தைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தலைநகர் டெல்லியில் தாக்குதலைத்  நடத்தி திசை திருப்ப தி்ட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கடந்த ஒரு மாதத்தில் ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அதனால், தீவிரவாதிகளிடம் இருந்தும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால், டெல்லியில் தாக்குதல் நடத்தும் நோக்கில் 4 முதல் 5 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறையினர் டெல்லி போலீசின் குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் டெல்லியில் உள்ள 15 மாவட்ட போலீசாரும் நேற்றிரவு முதல்  பாதுகாப்பையும், வாகனங்கள் தணிக்கையையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக டெல்லியின் எல்லைகள் சிறப்பு அதிரடிப்படைகள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பேருந்து, டாக்சி மற்றும் கார் மூலம் சாலை வழியாகவே தீவிரவாதிகள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளதால் எல்லைப்பகுதிகளில் உச்ச பட்ச கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான காய்கறி மார்க்கெட் பகுதி, மருத்துவமனைகள், பேருந்து நிலையம் ஆகியவற்றில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருவதால், நோயாளிகள் வேடத்தில் தீவிரவாதிகள் சென்றுவிடக்கூடாது எனும் நோக்கில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், டெல்லி மாநகருக்கு வரும் காஷ்மீர் பதிவு எண் கொண்ட வாகனங்கள், கார்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்தபின்பே அனுமதிக்கின்றனர்.

டெல்லியில் உள்ள தங்கும்விடுதிகள், ரெஸ்டாரண்ட்கள், விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் நேற்று இரவிலிருந்து போலீசார் கண்காணித்தும், சோதனை செய்தும் வருகின்றனர். குறிப்பாத டெல்லியின் வடக்கு மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்த எச்சரிக்கை இருப்பதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியை போன்று நாட்டின் பிற நகரங்களுக்கும் தீவிரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை