அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது: அதிபர் டிரம்ப் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது: அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது வெட்கக்கேடான செயல் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கடந்த மாதம் 25ம் தேதி காவலரின் கடுமையான நடவடிக்கையால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டார்.

காவல் துறையினரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.

தலைநகர் வாஷிங்டனில் கடந்த 2ம் தேதி இரவு நடைபெற்ற போராட்டத்தின்போது, இந்திய தூதரகத்துக்கு எதிரேயுள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசிடம் தூதரகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடமும் இந்திய தூதரக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது, காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், ‘அந்தச் சம்பவம் வெட்கக்கேடானது.

சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலையை சரிசெய்வதற்கான பணிகளில் இந்திய தூதரகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தேவையான உதவிகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வழங்கி வருகிறது’ என்றார்.

அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்துக்கும், டெல்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்துக்கும் வந்து சென்றது நினைவுகூரத்தக்கது.

.

மூலக்கதை