ஏழுமலையான் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: நடிகர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு: ஆந்திர போலீஸ் அதிரடி

தினகரன்  தினகரன்
ஏழுமலையான் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: நடிகர் சிவகுமார் மீது வழக்குப்பதிவு: ஆந்திர போலீஸ் அதிரடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பிரபல நடிகர் சிவகுமார் மீது ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசுபவர்கள் மீது தேவஸ்தானம் அளிக்கும் புகாரின் பேரில், ஆந்திர போலீசார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில், திருப்பதி கோயில் குறித்து அவதூறு பரப்பியதாக தேவஸ்தானம் சார்பில் நேற்று ஒரேநாளில் பல்வேறு புகார்கள் போலீசில் அளிக்கப்பட்டன. இதில், நடிகர் சிவக்குமாரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.‘நடிகர் சிவகுமார், திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறித்து வேண்டும் என்றே தவறாக பேசி வருகிறார். திருமலையில் தவறான செயல்கள் நடைபெறுவதாகவும், அதனால் ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறி வருகிறார்,’ என்று தேவஸ்தானத்திற்கு  வீடியோ ஆதாரத்துடன் தமிழ்மாயன் என்பவர் இ-மெயிலில்  புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக சிவகுமார் மீது தேவஸ்தானம் புகார் அளித்தது. அதன்பேரில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை