திருச்செங்கோட்டில் 1.10 கோடிக்கு மஞ்சள் விற்பனை
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விரலி, கிழங்கு மற்றும் பனங்காளி என 2,500 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் 6,132 முதல் 7,785 வரையும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் 5,799 முதல் 6,499 வரையும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் 10,319 முதல் 15,599 வரையும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 2,500 மூட்டை மஞ்சள், 1.10 கோடிக்கு விற்பனையானது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.