டிரம்ப்பின் பதிவை நீக்காதது ஏன்? ஊழியர்களுக்கு மார்க் ஜூகர்பெர்க் விளக்கம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் கருப்பின அமெரிக்கர்கள் குறித்து பேஸ்புக் தளத்தில் பதிவிட்டதை நீக்காததால் மார்க் ஜூகர்பெர்க் மீது விமர்சனங்கள் எழுந்தன. மார்க் மீது கோபம் கொண்ட பேஸ்புக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மார்க் தனது ஊழியர்களுக்கு சமாதான அறிக்கை ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மினேசோட்டா மாகாணத்தில் கருப்பின அமெரிக்கர் ஜார்ஜ் ஃபுளாயிட் படுகொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவின் பல மாகாணங்களில் போராட்டம் வெடித்து வருகிறது.
அமைதி வழியில் கருப்பின மக்கள் சிலர் போராடி வரும்போதிலும் சிலர் வன்முறை செயல்களில் ஈடுபட்டு கடைகளை சூறையாடி வருகின்றனர். இதனையடுத்து அதிபர் டிரம்ப் தனது பேஸ்புக் பக்கத்தில் வன்முறை, கடை கொள்ளையில் ஈடுபடுவோர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று எச்சரித்து இருந்தார்.
இந்தப் பதிவு டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டபோதும் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்படாததால் அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து கருப்பின மக்களுக்கு ஆதரவளிக்கும் பேஸ்புக் ஊழியர்கள் சிலர் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மார்க் தனது பணியாளர்களுக்கு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.,'அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதிவை நீக்காதது பேஸ்புக் ஊழியகள் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதை நான் அறிவேன். நான் என்றுமே கருப்பின மக்களுக்கும் அவர்களது நலன் விரும்பிகளுக்கும் ஆதரவாக நிற்பேன்' என உறுதி அளித்துள்ளார். பேஸ்புக்கின் வரம்புகளுக்கு உட்பட்ட காரணத்தாலேயே அதிபர் டிரம்பின் பதிவு நீக்கப்படவில்லை என முன்னதாக மார்க் விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.