கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியா; ஊரடங்கை சரியாக செயல்படுத்தவில்லை: வரைபடம் வெளியிட்டு ராகுல் டிவிட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியா; ஊரடங்கை சரியாக செயல்படுத்தவில்லை: வரைபடம் வெளியிட்டு ராகுல் டிவிட்

புதுடெல்லி: கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின், இத்தாலி நாடுகளின் பாதிப்பு வரைபடத்தை வெளியிட்ட காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி, இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு முறை தோல்வி அடைந்துவிட்டது என்று மத்திய அரசைக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், ஊரடங்கு மூலம் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் எவ்வாறு சமாளித்தன, ஊரடங்கை எவ்வாறு அமல்படுத்தின என்பது குறித்த வரைபடத்தை காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.



அதில் இந்த 4 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போது ஊரடங்கு மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தினார்கள் என்பதையும், இந்தியாவில் லாக்டவுன் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நடைமுறையில் இருந்தும் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை, ஊரடங்கை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் அந்த வரைபடம் மூலம் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல்காந்தி தனது டிவி்ட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “தோல்வியடைந்த ஊரடங்கு இப்படித்தான் இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. வைரசை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்? திட்டம் என்ன வைத்திருக்கிறீர்கள்? என்பதை பாஜக அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.



நம்முடைய சுகாதார மருத்துவ கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இருக்கிறதா என்பதை மக்கள் அறி்ந்துகொள்ள அனுமதிகப்பட்டுவார்களா?. அல்லது அவர்களின் கவனம் வேறு ஏதாவது திசை திருப்பப்படுமா? ஊரடங்கு தொடங்கியதிலிருந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தங்களுக்கு அரசிடம் இருந்து நேரடியாக நிதித்தொகுப்பு தேவை என தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

ஆனால், அவர்கள் குரல்கள், கேட்காத காதுகளில் சொல்லப்படுகின்றன.

உண்மையான பிரச்சினைகளைப் புரிந்து எப்போது அரசு விழிக்கப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை