கொரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து நுகர்வோரை துன்புறுத்துவதா?: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

தினகரன்  தினகரன்
கொரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து நுகர்வோரை துன்புறுத்துவதா?: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து நுகர்வோரை தமிழக அரசு துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு மின் கட்டணத் தொகை வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையாக மின் நுகர்வோர் அதிர்ச்சியடைந்து கொந்தளிப்பது அதிமுக அரசின் காதுகளில் விழாமல் இருப்பது கொடுமையாக இருக்கிறது.முந்தைய மாதக் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிப்பு வெளியான போதே, அடுத்து வருகின்ற மாதக் கணக்கெடுப்பில்  பி.எம்.சி கட்டணம் சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், இப்போது  ‘யூனிட்டை கழிக்காமல்’ வெவ்வேறான வீத பட்டியல் அடிப்படையில் புதிய மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. நடிகர் பிரசன்னா இதுகுறித்து கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக நியாயமான பதிலளிப்பதற்குப் பதில், பழிவாங்கும் விதமாக, அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அரசியல் ரீதியான அறிக்கையை ஒரு விளக்கமாகக் கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்காமல், கட்டணம் வசூலிப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு காரணம் என்பது நன்கு தெரிந்திருந்தும்,  மின் பகிர்மானக் கழகம் விந்தையான விளக்கமளிப்பதும் அதை அதிமுக அரசு ஆமோதித்து கொரோனா காலத்தில் மக்களிடம் ‘மங்காத்தா சூதாட்டம்’ போல், மின்கட்டண வசூலில் ஈடுபட்டு கெடுபிடி செய்வதும் பொறுத்துக் கொள்ள முடியாததாகும். ஊரடங்கில் வருமானத்தை இழந்து பரிதவிக்கும் அவர்களுக்கு, வீட்டுக்குப் பயன்படுத்தும் மின் கட்டணம் என்ற பாறாங்கல்லை தலையில் தூக்கி வைத்து அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் அதிமுக அரசின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது.ஆகவே, முந்தைய மாதம் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணம், மொத்த யூனிட்டை இரண்டு மாத நுகர்வாகப் பிரிப்பது, வீத பட்டியல் மாற்றத்தால் ஏற்படும் அதிக கட்டணம் உள்ளிட்டவற்றில், வேண்டுமென்றே உருவாக்கி இருக்கும் குழப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உரிய முறையில், யூனிட்டுகளையும் கழித்து மின் கட்டணம் வசூல் செய்வதை அதிமுக அரசு உறுதி செய்திட வேண்டும். கொரோனா காலத்தில் ஜவுளி, பொறியியல் பொருட்கள், தானியங்கி, மின் பொருட்கள், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடிக் கிடந்தன. தொழிலே இல்லாத போது எப்படி அவர்கள் எல்லாம் மின் கட்டணம் செலுத்துவார்கள், அவர்களுக்கு என்ன மாதிரி நிவாரணம் வழங்கி மனநிம்மதி அளித்து, மீண்டும் தங்கள் தொழிலைத் துவங்க வைப்பது என்ற அடிப்படை பொருளாதார ஊக்குவிப்பு பற்றியெல்லாம் கூட அதிமுக அரசுக்கு அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை. விவசாயிகளும் எல்லா வகையிலும் சொல்லொணாத துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆகவே, வேலைவாய்ப்பிற்கும், தமிழகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் மிக முக்கியப் பங்காற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் முன்மாத மின்கட்டணத்தை வசூலிக்காமல் முந்தைய மாதம் செலுத்திய மின் கட்டணத்தையோ அல்லது மின் நுகர்வோர் எடுத்துக் கொடுத்த ரீடிங்கிற்கான கட்டணத்தையோ பேரிடர் நிவாரணமாக அறிவித்திட வேண்டும். மேலும், ஆறு மாதங்களுக்காவது ‘கொரோனா கால’ மின் கட்டண சலுகைகளை வழங்கி தமிழகத்தில் வேளாண்மையும், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிட ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\'7ம் தேதி கோவை  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்\'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:  கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள், சட்டத்துறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை (7ம் தேதி) காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும். அப்போது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்கள் மற்றும் அதனை எதிர்த்துப் போராடும் கட்சியினர் மீது போலீஸ் மூலம் பொய் வழக்கு போடும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை