சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த... ஐவர் குழு!:அமைச்சர்களை களமிறக்குகிறார் முதல்வர்

தினமலர்  தினமலர்
சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த... ஐவர் குழு!:அமைச்சர்களை களமிறக்குகிறார் முதல்வர்

சென்னை:சென்னையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அமைச்சர்கள் அடங்கிய, ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. நோய் தடுப்பு பணியில், அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில், முதல் முறையாக, அமைச்சர்களை களமிறக்கி உள்ளார், முதல்வர். மூன்று மண்டலங்களுக்கு, ஒரு அமைச்சர் வீதம், ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது; அவர்களுக்கான வார்டுகளும் பிரித்து தரப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா கட்டுக்குள் உள்ளது. ஆனால், சென்னையில், நோய் பரவல் அதிகரித்தபடி உள்ளது. இதை கட்டுப்படுத்த, சென்னை மாநகராட்சி யில், மண்டல வாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பட, சிறப்பு அதிகாரியாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டு

மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட குழுவினர், கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்வகிப்பது, பரிசோதனைகள் செய்வது, தொற்று பாதித்தோருடன் தொடர்பில் இருந்தோரை கண்டறிவது, அவர்களை தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை கவனிக்கின்றனர்.எனினும், நோய் பரவல் குறையவில்லை. அதிகாரிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததும், முறையான திட்டமிடல் இல்லாததும், இந்நிலைக்கு காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்தது.

கோரிக்கை

மேலும், சென்னையில் நோய் பரவலை தடுக்க, ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்ற, கோரிக்கை எழுந்தது. இது குறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, மண்டல அளவிலான குழுக்கள் மற்றும் மாநகராட்சியின் நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, ஐந்து அமைச்சர்கள் இடம் பெற்ற குழுவை, அரசு நியமித்துள்ளது.சென்னையில் உள்ள, 15 மண்டலங்களில், தலா, மூன்று மண்டலங்களுக்கு, ஒரு அமைச்சர் என, ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களுக்கு, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்; அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களுக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்; அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களுக்கு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

எதிர்பார்ப்பு

திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்; அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார் மண்டலங்களுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சர்கள், மண்டல குழுக்களை ஒருங்கிணைத்து, அதிகாரிகள் உதவியுடன், சென்னையில் கொரோனா நோய் பரவலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பணிகள் முடுக்கி விடப்படும்!



ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:சென்னையில், ஏற்கனவே மண்டல வாரியாக, அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் உள்ளோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இப்பணிகளை, மேலும் சிறப்பாக மேற்கொள்ள, அமைச்சர்கள் நியமனம் உதவும்.நாங்கள் நேரடியாக மக்களை சந்திப்போம். அவர்களின் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வோம்.

மாநகராட்சி உதவியுடன், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவோம்.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அரசின் விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுப்போம். சித்த மருத்துவர் வீரபாபு தலைமையில், நோய் அதிகம் உள்ள பகுதிகளில், சித்த மருந்து கொடுக்கப்படுகிறது; ஓமியோபதி மருந்தும் கொடுக்கப்படுகிறது.அலோபதி, சித்தா, ஓமியோபதி மருத்துவர்களை ஒருங்கிணைத்து, நோயை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை