'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்

நியூயார்க்; ''ஏழைகள் மற்றும் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களின் தேவைகளுக்கு தீர்வு காண, டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம் என்பதை, கொரோனா பிரச்னை நமக்கு உணர்த்தியுள்ளது,'' என, ஐ.நா., வின் இந்திய பிரதிநிதி, டி.எஸ்.திருமூர்த்தி பேசியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, டி.எஸ்.திருமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார். ஐ.நா., வின் தேசிய மேம்பாட்டு திட்டம் குறித்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பேசியதாவது:கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுதும் சுகாதாரம் தொடர்பான பிரச்னை எழுந்துள்ளது. பின் இது, மிகப் பெரிய பொருளாதார பிரச்னையாக மாறியுள்ளது.

இதனால், உலகம் முழுதும் உள்ள ஏழைகள், அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், முன்னுரிமைப் படுத்துவதற்கும், 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் மிகவும் அவசியம் என்பதை, கொரோனா பிரச்னை, நமக்கு உணர்த்தியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டும் இல்லையென்றால், ஏழைகளின் பிரச்னைக்கு எப்படி தீர்வு கண்டிருக்க முடியும் என்பதை, கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

எனவே, எதிர்காலத்தில், அனைத்து வகையான மேம்பாட்டு திட்டங்களுக்கும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் மக்கள் சார்ந்த அனைத்து திட்டங்களிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நெருக்கடியான காலத்தில், அனைத்து நாடுகளுக்கும் இந்தியா பெருமளவில் உதவியுள்ளது. குறிப்பாக, மருந்து பொருட்கள், பரிசோதனை கருவிகள், கொரோனா குறித்த தகவல் பரிமாற்றம் ஆகிய விஷயங்களில் பெரும்பாலான நாடுகளுக்கு, இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை