மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்குவது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் நிவாரண உதவியாக வழங்க கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது குறித்தும், மெரினாவில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது குறித்தும், புயலில் சேதமடைந்த பெசண்ட் நகர் - லூப் சாலையை மீண்டும் அமைப்பது குறித்தும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாநகராட்சி ஆணையர் கொரோனா பணிகளில் தீவிரமாக உள்ளதால், மெரினாவில் கடை நடத்துவோருக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும், நடமாடும் கடைகள் அமைப்பது குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க மூன்று வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, நான்கு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், ஒரு அதிகாரியை நியமித்து திட்டத்தை வகுத்து அதன் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். மீனவர் பாதுகாப்பு சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன்பிடி தடைக்காலத்தை கணக்கில் கொண்டு மீனவர்களின் குடும்பத்திற்கு நாள் ஒன்றிற்கு 500 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து, மீன்பிடி தடைக் காலத்தில், மீனவர்களுக்கான மத்திய அரசின் நிவாரண தொகுப்பு குறித்து நான்கு வாரங்களில் தெரிவிக்க மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

மூலக்கதை