ஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்!!

தினகரன்  தினகரன்
ஏ பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ  பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்!!

ஸ்பேயின் : கொரோனா நோய்த்தொற்றின் போது நோயாளிகள் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாக்குவதற்கு ரத்த பிரிவு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வை,இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஐரோப்பிய கொரோனா மையப்பகுதி மருத்துவர்களும்  ஜெர்மன் மற்றும் நார்வே விஞ்ஞானிகளும் நடத்தியுள்ளனர். இந்த ஆய்வு இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள ஹாட் ஸ்பாட் நகரங்களில் 1,600 கொரோனா நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 1,610 நோயாளிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர், கடுமையான அறிகுறிகளுக்கு ஆளானவர்கள் ஆவர். இந்த ஆய்வின் போது, சார்ஸ்-கோவ் -2 நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் கடுமையான சுவாச நோயை உருவாக்கியவர்களில் மரபணுக்கள் பொதுவானவையா என்பதை தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் மரபணு அளவிலான பகுப்பாய்வை மேற்கொண்டனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் குறைந்தது இரண்டு குறிப்பிடத்தக்க இணைப்புகளை கண்டறிந்தனர். அவற்றில் ஒன்று, ரத்த பிரிவு ஏ- பாசிடிவ் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் துணை அல்லது வென்டிலேட்டர் தேவைப்படும் அளவிற்கு சுவாச கோளாறு பிரச்னை ஏற்படுகிறது என்றும் ரத்த பிரிவு ஓ பாசிடிவ் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படும் வாய்ப்பு குறைவே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ப்ரீ பிரிண்ட் சர்வர் மெட்ரிஸ்விக்கில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

மூலக்கதை