அமைந்தகரை, அரும்பாக்கத்தில் பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு வரவேற்பு
அண்ணாநகர்: அரும்பாக்கம், அமைந்தகரை காவல் நிலையங்களில் கொரோனா சிகிச்சை முடிந்து நேற்று எஸ்ஐ உள்ளிட்ட பல்வேறு காவலர்கள் பணிக்கு திரும்பினர். அவர்களுக்கு மலர் தூவி பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை மாநகரில் கொரோனா நோய்தொற்றுக்கு பொதுமக்கள், ஊர்க்காவலர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு காவலர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து, தங்களை வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, மீண்டும் காவல் பணிக்கு திரும்பி வருகின்றனர்.
நோய்தொற்றிலிருந்து முழுமையாக குணமாகி, கடந்த வாரம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணிக்கு திரும்பிய காவலர்களை துணை ஆணையர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இதன்மூலம் காவலர்கள் எவ்வித பயமுமின்றி தங்களது பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என காவல்துறை உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன் நோய்தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு எஸ்ஐ சிகிச்சை முடிந்து, நேற்று அமைந்தகரை காவல் நிலையத்தில் தனது பணியை மேற்கொள்ள வந்தார். அவரை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி மற்றும் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்ளிட்ட போலீசார் மேளதாளத்துடன், மலர் தூவி, பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இதேபோல், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய 2 காவலர்களுக்கு நேற்று போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் போலீசார் மேளதாளத்துடன் மலர்தூவி வரவேற்றனர்.
.